ஈரோடு காவிரி ஆற்றில் 25ந் தேதி காலை 30 வயது இளைஞர் ஒருவர் திடீரென ஆற்றுப் பாலத்தின் மேலே ஏறி காவிரி ஆற்றில் குதித்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி அந்த இளைஞரைத் தேடினார்கள். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஓடும் ஆற்று நீரில் குதித்த அந்த நபர் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அந்த உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கருங்கல்பாளையம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்தது. கார்மெண்ட்ஸ் தொழிலாளியான இவர், கரோனா காலத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் அதனால் வருமானமின்றி கஷ்டப்பட்டுள்ளார். இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையிலிருந்து வந்துள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்து வெறுப்புற்ற நிலையில் 25ந் தேதி காலை கருங்கல்பாளையம் காவிரி பாலத்திற்குச் சென்ற வேல்முருகன் திடீரென பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.