சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த சதீஷ் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மச்சந்திரா பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒகினாவா மின்சார இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். வழக்கம்போல், தனது மின்சார வாகனத்தில் ஜூஜூவாடி அருகே சென்ற போது, திடீரென வாகனத்தில் தீப்பற்றியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட சதீஷ், வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர் தப்பினார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இருப்பினும் வாகனம் தீக்கிரையானது.
இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவம் தொடர் கதையாகியுள்ள நிலையில், அதனை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.