Skip to main content

வட்டாட்சியர் காரை எறித்த இளைஞர் கைது! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Youth arrested who damaged Dasildar car

 

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. விடுமுறை நாளான நேற்று (24.10.2021) தாலுகா அலுவலகம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தாசில்தார் பயன்படுத்தும் கார், திடீரென தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். 

 

அத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அந்தப் பகுதியில் கண்ணாடித் துகள்கள், சுத்தியல், ஒரு வாட்டர் கேன் ஆகியவை கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்க்கும்போது, ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. அவரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

 

மேலும், தாலுகா அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வுசெய்தனர். அதில், அந்த நபர் தாசில்தார் கார் கண்ணாடியை சுத்தியலால் உடைப்பதும், வாட்டர் கேனில் கொண்டு வந்த வார்னிசை ஊற்றி தாசில்தார் காருக்குத் தீ வைப்பதும் பதிவாகியிருந்தது. அதேசமயம், பிடிபட்ட நபர் கண்டாச்சிபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது ரஞ்சித் என்பது தெரியவந்தது. 

 

Youth arrested who damaged Dasildar car

 

இதுகுறித்து போலீசார் ரஞ்சித்திடம் நடத்திய விசாரணையில், “எனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தாசில்தார் காருக்குத் தீ வைத்து எரித்தேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கடந்த வருடத்திற்கு முன்பு அதே தாலுக்கா அலுவலகத்தில் பதிமூன்று ஜன்னல் கண்ணாடிகளையும், தாசில்தார் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியதும் அவர்தான் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்துள்ளனர். 

 

மேலும், ரஞ்சித் போலீசாரிடம் கூறும்போது “தாலுகா அலுவலகத்தில் அளவுக்கதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள் உள்ளனர். அந்த கோபத்தில் இந்த செயலைச் செய்தேன்” என்று கூறியதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.