Skip to main content

மனைவி குழந்தைகளை பிரிந்த சோகம்; பிணையில் வந்த கணவர் கோயிலில் தூக்கிட்டு தற்கொலை! 

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

youngster passed away in temple

 

சேலம் அருகே, திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான தொடர்பால் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரு குடும்பமே பலியான சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கணவாய்புதூர் ஊராட்சி, கே.மோரூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவருடைய மனைவி மரகதம் (30). இவர்களுக்கு செல்வகணபதி (7), கோகுலகண்ணன் (5) ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். பிரபாகரன், தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அதே தோட்டத்தின் ஒரு பகுதியில், சிறிய அளவில் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையும் நடத்தி வந்தார். 

 

இந்நிலையில் அவருக்கு, வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த பிப். 14ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தி அடைந்த மரகதம், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார். தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்களே எனக்கருதிய மரகதம், பிப். 14ம் தேதியன்று, தங்களது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசி எறிந்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு, அவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

 

இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். பிரபாகரன் நடத்தி வந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதையறிந்த மரகதத்தின் பெற்றோர், பிரபாகரன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு பிரபாகரன், தனது மனைவியை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியதோடு, அவரை தற்கொலைக்கு தூண்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதன்பிறகுதான் மரகதம் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வழக்கில் பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபாகரன், பிணையில் விடுதலை ஆனார். மனைவி, குழந்தைகள் இல்லாமல் வீட்டில் தனிமையில் இருந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அக். 5ம் தேதி இரவு கே.மோரூரில் இருந்து தலையாரியூர் பகுதிக்கு வந்த பிரபாகரன், தனது குலதெய்வ கோயிலான அண்ணமார் கோயிலுக்குச் சென்றுள்ளார். திடீரென்று அந்தக் கோயிலுக்குள் சென்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இந்நிலையில் வியாழக்கிழமை (அக். 6) கோயிலுக்கு வந்த பக்தர்கள், பிரபாகரன் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 


திருமண உறவுக்கு வெளியே ஏற்பட்ட தவறான உறவால், அப்பாவி குழந்தைகள் உள்பட ஒரு குடும்பமே பலியான சம்பவம் கே.மோரூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.