Skip to main content

‘என் மகள கொன்னுட்டாங்க..’; கண்ணீர் விடும் குடும்பத்தினர் - இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Young girl lost their life due to dowry violence

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகே அமைந்துள்ள ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் - முத்துலட்சுமி தம்பதி. இந்த தம்பதியின் மகள் ஆர்த்தி என்கின்ற தனலட்சுமி. 20 வயதான இவர், கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்த சேகர் - முத்துலட்சுமி தம்பதி, அவருக்குத் திருமண வரன் பார்த்து வந்தனர். அதன்படி, தனலட்சுமிக்கும் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் 24 வயதான முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதத்தில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது, அவர்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு குறைந்த அளவில் வரதட்சணை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது. அதற்கெல்லாம் பணம்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே முரளி குடும்பத்தினர் தனலட்சுமிக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினர். உன்னுடைய வீட்டிற்குச் சென்று மேலும் பணம் வாங்கிக்கொண்டு வா என தனலட்சுமியை தினந்தோறும் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், குடி போதைக்கு அடிமையான முரளி தனது மனைவி தனலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உறவினர்கள் என கணவன் மனைவி சண்டையை தீர்த்து வைப்பது வழக்கம். ஆனாலும், இவர்களுக்குள் தினந்தோறும் தகராறு நடந்துகொண்டே இருந்தது.

Young girl lost their life due to dowry violence

பெண்வீட்டார் கொடுத்த வரதட்சணை போதாது என்று தனலட்சுமியிடம் மீண்டும் பணம் கேட்டு முரளி மட்டுமின்றி அவரது தாய், தந்தை என அனைவரும் சேர்ந்துகொண்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த தனலட்சுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனலட்சுமி தனது சகோதரனுக்கு வாட்ஸப்பில் ஒரு குரல் பதிவு அனுப்பியுள்ளார். அதில், ‘கணவன் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இங்கிருந்தால் எந்த நேரமும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே தந்தையுடன் வந்து தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு..’ தனலட்சுமி அந்த குரல் பதிவில் பேசியுள்ளார். இதைக் கேட்டவுடன் தனலட்சுமி குடும்பத்தார் மிகுந்த கலக்கத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதியன்று கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, வீட்டில் ஆள் இல்லாத சமயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாப்பிள்ளை வீட்டிலிருந்து தனலட்சுமி குடும்பத்தாரை செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விஷயங்களை கூறியுள்ளனர். ஒருகணம், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக முரளி வீட்டுக்கு வந்து தங்களுடைய மகளின் உடலைப் பிடித்துக்கொண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். அதுமட்டுமின்றி, தனது மகள் தனலட்சுமியை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கணவன் வீட்டார் கொன்றுவிட்டதாக சோழவரம் காவல் நிலையத்தில் பெண் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.  

அதன்பேரில், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த தனலட்சுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், திருமணம் ஆன 11 மாதத்திலேயே இந்த மர்ம மரணம் நிகழ்ந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Young girl lost their life due to dowry violence

இத்தகைய சூழலில், கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் குவிந்த தனலட்சுமியின் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டாரை கைது செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சாதகமாக செயல்படுவதாகத் தெரிவித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது திருமணமான 11 மாதத்தில் மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.