திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதி வழியாக கொங்கு மாவட்டங்கள், கேரளா மாநிலத்துக்குச் செல்லும் ரயில்பாதை உள்ளது. இந்த ரயில்பாதை வழியாக அக்டோபர் 22ஆம் தேதி காலை சென்ற அப்பகுதி மக்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.
இரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளம் வயதுடைய, ஆண் தலை தனியாகவும், கை, கால்கள், உடல் தனியாகவும் இருப்பதைப் பார்த்து பயந்துபோயினர். இது தொடர்பாக உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தந்தனர். உடல் பாகங்கள், ரயில்வே பாதையில் இருப்பதால் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றினர்.
பின் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மற்றும் திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ஆகிய இருதரப்பும் இணைந்து, இறந்தவர் சிறிய வயதாக இருப்பதால், இவர் யார், இது கொலையா அல்லது தற்கொலையா, எந்த ரயில் மோதியது? என்று பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.