![38 shop sealed for selling banned tobacco](/modules/blazyloading/images/loader.png)
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் காவல் ஆணையர் காமினி அறிவுறுத்தலின் பேரில், காவல் ஆணையர் அலுவலகம் மூலமாக மாநகர பகுதியில் உள்ள 13 காவல் நிலையங்களிலிருந்து 72 பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பெறப்பட்டன.
இதனடிப்படையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு மற்றும் உணவு பாதுகாப்பு துறை வழிகாட்டுதலின் பேரில் மாநகர பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகள் அனைத்தும் இன்று அமைக்கப்பட்ட 9 குழுக்களில் அடங்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆயுதப்படை பிரிவை சார்ந்த காவலர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துறையினர் உள்ளடங்கியோர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 38 கடைகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் அபராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்; தொடர்ந்து இது போன்ற கடைகள் வரும் நாட்களில் மாவட்டம் முழுவதும் சீலிடப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைகள் சீல் செய்யப்படும் என்றும் கூறினார்.
இது போன்று பொதுமக்களும், உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்வது கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.