Skip to main content

தனிமைச்சிறையிலிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண்... வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பெண் தன்னுடைய இரு குழந்தைகளுடன் போலீஸாரை ஏமாற்றி ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலையிலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்ல முயற்சிக்கையில், ஆம்புல்ன்ஸை விரட்டி சேஸிங் செய்து மடக்கி பிடித்து மூவரையும் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் திருவாடனை உட்கோட்டப் போலீசார்.

 

 Woman trying to escape from an ambulance in private ...

 

கரோனா வைரஸ் தொற்று நோய்க் காரணமாக வெளிநாட்டினர், வெளிநாட்டிலிருந்து திரும்பியோர், அவர்களுடனான தொடர்பிலிருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து தங்களது மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன மத்திய மாநில அரசுகள். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு போக, ஏனையோர் அவர்களுடைய வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பின் காலமாக 28 நாட்களிலிருந்து 14 நாட்கள் வரை என வரையறைப்படுத்தியுள்ளது அரசு. இது இப்படியிருக்க, மருத்துவக்கண்காணிப்பிலுள்ள சிலர், கரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ கெடுபிடிகளுக்கு பயந்து எஸ்கேப்பாகியதும் உண்டு. இந்நிலையில், 28ம் தேதி இரவில் சிவகங்கை - ராமநாதபுர மாவட்ட எல்கையான கருமொழி சோதனை சாவடியில் ராமநாதபுர மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் இளவேனில், திருவாடனை காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.சுல்தான் இப்ராஹிம் மற்றும் திருப்பாலைக்குடி காவல்நிலையத்தினை சேர்ந்த போலீஸ் முத்து ஆகியோர் பாதுகாப்பில் இருந்தபொழுது TN55-BB-8448 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற ஆம்னி வகை ஆம்புலன்ஸை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக விராமலையிலிருந்து ராமநாதபுரம் ஒருவரும், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் ஆம்புலன்ஸிலுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறிக் கொண்டிருந்த வேளையில், " அது டிஎஸ்பி-க்கு சொந்தமான வண்டி" என டிஎஸ்பி அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசுவதாக எஸ்எஸ்ஐ-க்கு தகவல் வர, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் அந்த ஆம்புலன்ஸை சேஸிங் செய்து மடக்கி பிடித்து போலீசார் திருவாடனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

 Woman trying to escape from an ambulance in private ...


 "அந்த ஆம்புலன்ஸை விடுவிக்க ஒன்றிற்கும் மேற்பட்ட டிஎஸ்பி ராங்க் அதிகாரிகள் பேசியதும், வாகனத்திற்குள் இருந்த அவர்களின் தோற்றமும் எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே மடக்கி பிடித்து விசாரித்தோம். அந்த ஆம்புலன்ஸிற்குள் இருந்த பெண்ணின் பெயர் லதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது). உடனிருந்தது அவருடைய 11 வயது மகள் மற்றும் 8வயது மகனுமே.!!! சமீபத்தில் தான் அபுதாபியிலிருந்து சென்னைக்கு திரும்பியிருக்கின்றார்கள். சென்னை பம்மலில் உள்ள வீட்டில் இவர்கள் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி விராலிமலை வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றிருக்கின்றார். இதற்காக ஒவ்வொரு செக்போஸ்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும்  ஒரு டிஎஸ்பியின் பெயரைக் கூறி தப்பியிருக்கின்றார்.அது இங்கேயும் கூறப்பட இப்பொழுது சிக்கியுள்ளார். ஆம்புலன்ஸின் உரிமையாளர், டிரைவர் உட்பட அனைவரின் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்கின்றனர் திருவாடனை போலீசார். மருத்துவப் பரிசோதனையின் முடிவில் பெண் குழந்தைகள் உட்பட மூவருக்கும் கரோனா தொற்று இல்லை எனினும் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அந்த டிஎஸ்பி பெயரைக் கூறி ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண் சென்னையிலிருந்து விராலிமலைக்கு வந்தது எப்படி..? சட்டத்தினை மீறி இவர்களுக்கு எதற்காக டிஎஸ்பி உதவவேண்டும்..? இன்னும் எத்தனை நபர்களை அவர் அனுப்பியிருக்கக்கூடும்..?" என பல கேள்விகளுடன் டிஎஸ்பியின் தரவுகளை ஆராய்ந்து வருகின்றது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.