Skip to main content

"எங்க அப்பாவை கொன்னுட்டீங்க..." - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

woman struggle Vellore Collectorate

 

வேலூர் மாவட்டம் அருகே உள்ள ஒதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த திங்கட்கிழமை அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது திடீரென காயிதே மில்லத் நினைவு அரங்கம் முன்பு தரையில் அமர்ந்த விஜயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தர்ணாவில் ஈடுபட்ட விஜயலட்சுமியிடம் "எதற்காக போராட்டம் நடத்துறீங்க, என்ன பிரச்சனைனு சொல்லுங்க தீர்த்து வைக்கிறேன்..." என விசாரித்தார்.  அப்போது விஜயலட்சுமி  “எனது தந்தை பெயரில் கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவில் பல குளறுபடிகள் இருக்கின்றது. அதை சரிசெய்து தருமாறு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

 

இதைக் கேட்ட கலெக்டர்  “மீண்டும் ஒருமுறை மனு தாருங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்” என்றார். அதற்கும் சம்மதிக்காத விஜயலட்சுமி  “என்னால இனிமேல் மனு அளிக்க முடியாது. எனக்கு இப்பவே இதற்கு ஒரு தீர்வு வேண்டும்” என பதிலளித்துள்ளார். உடனே மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் இருந்த ஆவணங்களை வாங்கி சரி பார்த்தார். ஆட்சியர் தரையில் அமர்ந்து குறை கேட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

விஜயலட்சுமியின் நில ஆவணங்களை சரி பார்த்த கலெக்டர்  இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனாலும் விஜயலக்ஷ்மி செல்ல மறுத்ததால் அவரை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

 

அதன் பிறகு, விஜயலட்சுமியிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி பேசும்போது “என்னுடைய நிலத்திற்கான பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் முன் வரவில்லை. பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என் தந்தை இறந்தே விட்டார். அவரை கொன்று விட்டீர்கள்” என கண்ணீருடன் கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் ஆபிஸில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.