Skip to main content

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவமானப்படுத்திய கும்பல்; உயிரை விட்ட இளம்பெண்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

woman passed away due usury chennai

 

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அகிம். இவரது மனைவி நூர்ஜகான் பாத்திமா. இந்த தம்பதிக்கு யாஸ்மின் என்கிற 26 வயது மகளும், ஜவகர் பரூக் என்கிற 24 வயது மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சையத் அகிம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது, கணவனை இழந்த நூர்ஜகான், தன் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

 

மேலும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நூர்ஜகான், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். அதே சமயம், பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும் குடும்ப தேவைக்காகவும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம், தனிப்பட்ட முறையில் நூர்ஜகான் பாத்திமா சிறுகச் சிறுக 8 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் வட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

 

ஒருகட்டத்தில் பணம் கொடுத்த கடன்காரர்கள், வட்டியுடன் சேர்த்து 18 லட்ச ரூபாயாக தர வேண்டும் என நூர்ஜகானை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நூர்ஜகான், வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் பதறிப்போன நூர்ஜகானின் மகன் ஜவகர், அவரைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனால், நூர்ஜகானை எங்கு தேடியும் கிடைக்காததால் 17ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

அப்போது தலைமறைவான நூர்ஜகான், தான் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் வீட்டில் இருப்பதாக செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஜவகர் வேலை சம்பந்தமாக  வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் அவரது சகோதரி யாஸ்மின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயம், வீட்டிற்கு வந்த கடன் கொடுத்த மூன்று பெண்கள், யாஸ்மினை தகாத வார்த்தையில் அவமானப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

 

இதனால், மனவேதனை அடைந்த யாஸ்மின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அப்போது வீட்டில் ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாததால் தனிமையில் வாடிய யாஸ்மின், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த ஜவகர், தன் சகோதரியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறியுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், யாஸ்மினின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இச்சம்பவம்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜவகர் பரூக் கந்துவட்டி கொடுமையால் தனது சகோதரி யாஸ்மின் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயம், கந்துவட்டி கொடுமையால் அவமானப்படுத்தப்பட்ட பெண், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.