Skip to main content

முறையற்ற உறவு; கணவனைக் கொல்ல வீடியோ பார்த்த மனைவி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Woman arrested under 302 in namakkal district

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்ல முயற்சி நடந்ததாக நாமகிரி பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில் குணசேகரனின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். கூலித் தொழிலாளியான குணசேகரனுக்கு காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி, சக்திவேல் என்பவரின் தோட்டத்திற்கு வெங்காயம் எடுக்கும் பணிக்காகச் சென்றுள்ளார். சக்திவேல் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். காயத்ரிக்கும், சக்திவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. குணசேகரன் வீட்டில் இல்லாத நேரத்தில் காயத்ரியும், சக்திவேலும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். குணசேகரனுக்கு நாளடைவில் உடல் நிலை சரியில்லாமல் போக அவர் வீட்டிலேயே இருந்துள்ளார்.

 

இதனால், தங்களது உறவில் தடை ஏற்பட்டுள்ளது என்று எண்ணிய காயத்ரி தனது கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். தன் கணவனைக் கொன்ற பிறகு காவல்துறையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கை ரேகை பதியாமல் கொலை செய்வது எப்படி என்று யூடியூபில் தேடியுள்ளார். அதன்படி அவர், போலீசில் சிக்காமல் கொலை செய்வதற்கு ஒரு வீடியோவை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை சக்திவேலிடம் காட்டியுள்ளார். அந்த வீடியோவில் இருப்பது போல் கொலை செய்யத் திட்டமிட்ட காயத்ரி, சக்திவேலிடம் அந்த வீடியோவில் இருப்பதை போலவே செய்யச் சொல்லியுள்ளார். காயத்ரி கூறியதைத் தொடர்ந்து சக்திவேல், குணசேகர் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வீடியோவில் வருவது போலவே கொலை செய்ய முயன்றுள்ளார். அந்த சமயம் சுதாரித்துக் கொண்ட குணசேகரன், சக்திவேலை பிடிக்க முயன்றுள்ளார்.

 

அப்போது பதறி அடித்தபடி ஓடிய சக்திவேல், தான் வந்த இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடியுள்ளார். இந்தக் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பிய குணசேகரன், நாமகிரி பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினருக்கு குணசேகரின் மனைவி மீது சந்தேகம் வலுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காயத்ரி நடந்தவற்றைக் கூறியுள்ளார். அதன் அடிப்படையில், காயத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சக்திவேலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.