Skip to main content

சில நாட்களிலேயே முடிவுக்கு வந்த காதல் உறவு; காதலன் வீட்டு முன்பு பெண் ஆசிரியர் போராட்டம்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

wife has filed police complaint against her husband salem

 

திருமண ஆசை காட்டி திருமணத்திற்கு முன்பே பாலியல் அத்துமீறல் செய்த காதலன், தாலி கட்டிய பின் சில நாட்களிலேயே ஓட்டம் பிடித்ததால் ஏமாந்து போன பெண் ஆசிரியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காதல் கணவன், அவருடைய பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உடையார்பாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் சுகன்யா (28). தனியார் பள்ளி ஆசிரியர். இவர், நவ. 20 ஆம் தேதி, சேலம் பச்சைப்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவில் உள்ள கோகுல் (27) என்பவர் வீட்டிற்குச் சென்று, திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.  

 

அப்போது அவர், ''கோகுல் என்னை காதலித்து, திருமண ஆசை காட்டி, பாலியல் உறவு கொண்டார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் சொன்னதன் பேரில்  வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைத்துவிட்டேன். அதையடுத்து என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார்'' என்றார்.  

 

கோகுலின் பெற்றோர் வீட்டுக்கு வெளியே வந்து சுகன்யாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் கோகுல் மீது புகார் அளித்தார்.  

 

அவர் அளித்த புகாரில் “கோகுலும் நானும் காதலித்து வந்தோம். கடந்த 2019 ஆம் ஆண்டு என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால் கர்ப்பம் அடைந்தேன். பின்னர் அவர் என் வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்துவிட்டார். இதையடுத்து சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டினார். சில நாள்கள் மட்டுமே என்னுடன் குடும்பம் நடத்தினார். பின்னர் தாலியைக் கழற்றிவிட்டு என்னை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, இனிமேல் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்லிவிட்டு பிரிந்து சென்று விட்டார்.  கோகுலின் பெற்றோரும், அவருடைய அண்ணனும் என்னை ஆபாசமாக பேசுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.  

 

இதுகுறித்து காவல் ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை நடத்தி, காதலன் கோகுல், அவருடைய தாயார் ரேணுகாதேவி, தந்தை ரவி, அண்ணன் சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது சாதி வன்கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக சேலம் நகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசன் விசாரணை நடத்தி வருகிறார். கோகுல் மீது ஏற்கனவே சுகன்யா ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், கோகுல் முன்பிணை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து கோகுலின் பெற்றோரைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சேலம் பச்சைப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.