Skip to main content

சப் இன்ஸ்பெக்டர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார்..! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

  wife complains about sub-inspector in viluppuram


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவருகிறார் இளங்கோவன் (35). இவரது மனைவி இந்துமதி (30). இவர், நேற்று (17.06.2021) மதியம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நேரடியாக நடத்திய விசாரணையில், இந்துமதி கூறியதாவது; “2019ஆம் ஆண்டு எனக்கும் தற்போது அவலுர்பேட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் இளங்கோவனுக்கும் திருமணம் நடந்தது. 

 

திருமணம் முடிந்த 5 மாதத்தில் எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு, பிரச்சனை ஏற்பட்டுவந்தது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறினார்கள். இதன் பிறகு எனது கணவர் இளங்கோவன், எனது பெற்றோரிடமிருந்து 100 சவரன் நகைகளை வரதட்சணையாக வாங்கி வருமாறு தகராறு செய்தார். எப்படி நமது மகளை வைத்து நல்ல முறையில் வாழ்வார் என்ற காரணத்தினால், எனது பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை எனது கணவர்  பெயருக்கு எனது பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய். ஆனால், அதன் பிறகும் என்னுடன் வாழாமல் அவலூர்பேட்டையிலேயே தங்கியுள்ளார்.

 

அவர் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது சம்பாதித்த பணத்தில் நிலம், வீடு வாங்கியுள்ளார். அவை அனைத்தையும் அவரது தங்கை பெயரில் எழுதிவைத்துள்ளார். அவரது தங்கை கணவர், காஞ்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்கிறார். அவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவருகிறார். எங்கள் உறவினர்கள் பலமுறை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி என்னோடு சேர்ந்து என் கணவர் வாழ்வதற்கு முயற்சி செய்தனர். அவர் ஒத்துவரவில்லை. இதற்கு மேலும் பொறுப்பதில் பயனில்லை என்று முடிவு செய்தேன். ஏற்கனவே  இங்கு வந்து மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

 

இதன்பிறகு என் கணவர் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். குடும்ப வாழ்க்கை என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருந்தேன். இனி எனது கணவருடன் சுமுகமான முறையில் சேர்ந்து வாழவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மனைவி இந்துமதி கூறினார். 

 

அவர் இளங்கோவனுடன் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டுச் சென்றார். புகாரை வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்து அவரது மனைவியை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவர் மீது, அவரது மனைவியே பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறி புகார் அளித்துச் சென்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.