Skip to main content

இளைஞர் மீது மோதிய வாகனம் எது?-மேல்சட்டை இன்றி உறவினர்கள் சாலை மறியல்

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Which vehicle hit the youth? Relatives barricaded the road without shirts

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 22 ந் தேதி அதிகாலை வீட்டின் அருகே சாலை ஓரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வடகாடு போலீசார் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின் ரமேஷின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

போலிசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தைக் கைவிட்டு உறவினர்கள் சடலத்தை அடக்கம் செய்தனர். தொடர்ந்து வடகாடு போலீசார் அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்களை கண்டறியும் பொருட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஒரு கார் சந்தேகத்திற்கிடமாக சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ஆய்வும் விசாரணையும் நடந்து வருகிறது. விபத்து நடந்து 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டுபிடிக்கப்படவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை பல கிராமங்களில் இருந்தும் 8 ம் நாள் சடங்கில் கலந்துகொள்ள வந்த ரமேஷின் உறவினர்கள் வழக்கமான கிராம வழக்கப்படி துக்க நிகழ்வில் மேல் சட்டை அணியாமல் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கலந்து கொள்வது வழக்கம். அதேபோல வந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க கோரி அப்படியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் உத்தரவில் ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

விரைவில் விபத்து ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்படும் ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என்று உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக எட்டாம் நாள் சடங்குகள் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.