Skip to main content

தங்கப்பதக்கம் எங்கே? பரிசு ரூ.1 லட்சம் எங்கே? - காரியாபட்டி கல்லூரி மாணவி குமுறல் வீடியோ வைரல்!

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Where is the gold medal? Where is the prize of Rs 1 lakh? - Kariyapatti College student's video viral!

 

காரியாபட்டியில் உள்ள சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு தங்க மெடல் வழங்குவதாகத் தெரிவித்துவிட்டு பித்தளை மெடல் வழங்கி ஏமாற்றிவிட்டதாக  சமூக வலைத்தளத்தில் மாணவி ஒருவர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

விருதுநகர் மாவட்டம் -  காரியாபட்டி அருகிலுள்ள  சிஇஓஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தர்மராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு  பட்டம் வழங்கி கௌரவப்படுத்தினர்.

 

இந்தக் கல்லூரியில் மாணவ-மாணவியர் சேர்க்கையின்போது, யுனிவர்சிட்டி ரேங்க் எடுப்பவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கப் பணமும், தங்கப் பதக்கமும்  வழங்குவோம் என மாணவ,  மாணவியர் மற்றும் பெற்றோர்களிடம் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இக்கல்லூரியில் 2017 முதல் 2020 வரை  வணிகவியல் பாடப் பிரிவு படித்த மாணவி தீபலெட்சுமி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.  மேலும்,  பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடம், நான்காவது இடம், ஆறாவது இடம் பிடித்து மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இவர்களை, தங்கப்பதக்கம் வென்றவர்கள் எனக் கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவித்து, மாணவர் சேர்க்கைக்காக சுவரொட்டிகளில் விளம்பரம் செய்துள்ளனர்.

 

பட்டமளிப்பு விழாவிலோ  மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரவரிசை பெற்றவர்களுக்கு  ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொடுக்காமலும்,  தங்க பதக்கத்துக்கு பதிலாகப் பித்தளைப் பதக்கமும் வழங்கியிருக்கின்றனர். அதனால், பல்கலைக்கழக முதலிடங்களைப் பிடித்த மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்த மாணவ, மாணவிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். அதனால், கல்லூரி நிர்வாகம் நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர். முதலிடம் பிடித்து சாதனை படைத்த அந்தக் கல்லூரி மாணவியின் குமுறல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.