Skip to main content

“தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்?” - ராமதாஸ்

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

"When will the suffering of the workers end?" - Ramadoss

 

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கியிருக்கின்றனர். இதில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை எனப் பல இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிலர் இறந்துவிட்டதாகவும் தவறான தகவல்கள் வெளியாகின. இதனால், 2000க்கும் மேற்பட்ட சக பெண் ஊழியர்கள் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “காஞ்சிபுரத்தை அடுத்த சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் விடுதியில் வழங்கப்பட்ட  தரமற்ற உணவை உட்கொண்ட எட்டு பெண் தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை அடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுமார் 1000 பெண் தொழிலாளர்கள்  நடத்திய சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், விடுதிகளில் தங்கியுள்ள தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எப்போது தீரும்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை.

 

சுங்குவார்சத்திரம் பகுதியில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு சொந்தமான செல்பேசி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், பூவிருந்தவல்லியில் உள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட பெண்களில் 116 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் 8 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியான தவறான செய்திகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உயிரிழந்ததாகக் கூறப்படும் 8 தொழிலாளர்களின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்; அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு முதல் 11 மணி நேரமாக சாலை மறியல் நடத்தினர்.

 

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, உண்மை நிலையை விளக்கி  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை முறிந்திருந்தால், நடக்கக்கூடாத நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். ஆனால், மிகவும் பொறுமையாக செயல்பட்டு, எந்த தொழிலாளரும் உயிரிழக்கவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் காணொளியில் பேசி போராட்டக்காரர்களுக்கு விளக்கியும், தரமற்ற உணவு வழங்கிய விடுதியின் காப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக உறுதியளித்தும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.

 

தரமற்ற உணவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்ட சக தொழிலாளர்களின் நிலையை அறிவதற்காக நள்ளிரவில் தொடங்கிய போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றதும், சுமார் 11 மணி நேரம் போராட்டக் களத்தில் உறுதியாக இருந்ததும் சாதாரணமான ஒன்றல்ல. விடுதியில் தரமற்ற உணவு, அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவலமான வாழ்க்கைச் சூழல் என கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வந்த வெளியில் சொல்ல முடியாத கொடுமைகள் தான் இந்த அளவுக்கு போராட்டம் நடத்துவதற்கான மனதிடத்தையும், உறுதியையும் அவர்களுக்கு வழங்கி உள்ளன. அவர்களின் குறைகள் உடனே களையப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிப்பதை தடுக்க முடியாது.

 

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை விடுதி மட்டுமல்ல, சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வரும் பெரும்பான்மையான விடுதிகளின் நிலையும் இதே அளவில் தான் உள்ளன. மனிதர்கள் உண்ணத் தகுதியற்ற உணவு, கால்நடைகளைப் போன்று சிறிய அறையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்க வேண்டிய அவலம், நோய்களை பரப்பக்கூடிய கழிவறைகள் போன்றவை தான் தொழிலாளர்களுக்கான விடுதிகளின் அடையாளங்கள் ஆகும். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தங்கள் குடும்ப வறுமை காரணமாக சென்னையிலும், பிற இடங்களிலும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களில் மிகக்குறைந்த ஊதியத்தில் வேலைக்கு சேருகின்றனர். அவர்களுக்கான விடுதிகள் சிறைகளை விட மிக மோசமாக இருக்கும். தொழிலாளர்களும் தங்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு மனதிற்குள் அழுதபடியே இதை சகித்துக் கொள்கின்றனர். இந்தக் கொடுமைகளை பட்டியலிட பல நூல்களை எழுத வேண்டும்.

 

இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறையும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இவற்றைக் கண்டு கொள்வதே இல்லை. சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் பத்தாயிரத்திற்கும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களிடத்தில் நிகழ்த்தப்படும் சுரண்டல்கள் குறித்து எந்த அரசும் கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது பாமர மக்களுக்கும் தெரியும்.

 

தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதும், விடுதிகளில் அவர்கள் கண்ணியமாக வாழ்வதும் உறுதி செய்யப்பட வேண்டும். விடுதிகளில் அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுவதையும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்; இவற்றை கண்காணிக்க நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு குழுக்களை தமிழக அரசு அமைக்க வேண்டும்.” இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.