Skip to main content

'காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு?'- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 'What is wrong with comparing Stalin with Kamaraj?'- E.V.K.S. Elangovan interview


'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள்' என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''சென்னையில் கடந்த 11-ந்  தேதி காமராஜர் இல்லத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என்றும், நடைபயணம் செல்ல வேண்டும், அதிக அளவில் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும், இளைஞர்களை அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது கூடுதலாக இரண்டு வாரத்தை பேசினார். அதைப் பற்றிய விவாதம், பிரச்சனை முடிந்து விட்டது. அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அவர் சொன்னதை ஏற்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம் என முன்னாள் எம்.பி. ஒருவர் கருத்து சொன்னார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பல இடத்தில் மேயர், கவுன்சிலராக இருப்பதற்கு கூட்டணிதான் காரணம். கூட்டணியில் சலசலப்பு இருக்கதான் செய்யும். வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் போட்டியிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். பொற்கால ஆட்சி என்று சொல்வதற்குப் பதிலாக இந்த ஆண்டு நவீனத்திற்கு ஏற்ப ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று சொன்னேன்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்களாக இருப்பதற்குக் காரணம் காமராஜர். அவர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது எத்தனையோ நிதி நெருக்கடி இருக்கும் சூழலிலும் அனைத்து அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  மதிய உணவு தந்த காமராஜருடன் காலை உணவு தந்த ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு? தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள். நான்கு முனை போட்டியில் வாக்குகள் சிதறத் தான் செய்யும். கடந்த தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  பா.ம.க,பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் போன்றவர்களால் தான் பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜனை அமித்ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால் அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடு இன்றி அவர் தமிழச்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் நான் கண்டிக்கிறேன்.

முஸ்லிம்கள் 25 சதவீதம் பேர் உள்ள நிலையில் ஒருவருக்கு கூட பா.ஜ.க சீட் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்தியாவுக்கு எப்படி பொதுவான அரசாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும்.நீட் தேர்வு குளறுபடி காரணமாக தான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பம் முதல் நீட் வேண்டாம் என்றார். தற்போது கேட்டால் காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வந்தது என்பார்கள். காங்கிரஸ் நீட் தேர்வு கொண்டு வந்த போது மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் நடந்து கொள்ளலாம் என்று சொன்னது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப்பெருந்தகை, நானும் பிரச்சாரம் செய்வோம். நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றது வரவேற்கிறேன். நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உடனடியாக எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.காவல்துறையினர் கைது செய்தால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும். இன்னும் மோடி தலைமையிலான ஆட்சி 5 மாதங்களில் கலைந்துவிடும். இதற்கு பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளே காரணமாக இருக்கலாம்''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.  

Next Story

'என் சகோதரிக்கும் ஆதரவளிக்க வேண்டும்'-ராகுல் எடுத்த முடிவு

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
' want to support my sister' - Rahul's decision

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்த தொகுதியில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.

ராகுல் காந்திக்கு தேசத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே ராகுல் காந்தியை புரிந்துகொண்டு கேரள மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் மக்கள் வருத்தப்படக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுதாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை அறிவித்துள்ளார். 'ரேபரலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள். வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்க மாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 'ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இல்லை என்ற உணர்வே வரவிடமாட்டேன். வயநாடு மக்களுக்காக கடினமாக உழைத்து நல்ல பிரதிநிதியாக செயல்படுவேன். நாங்கள் இருவருமே வயநாடு மற்றும் ரேபரலி தொகுதியில் தொடர்ந்து இருப்போம்' என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.