Skip to main content

சொத்துக்குவிப்பு புகார்: அதிமுக சேலம் இளங்கோவனின் வங்கி லாக்கர்களில் சிக்கியவைகள் என்ன?

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

 What are the contents of ADMK Salem Ilangovan's bank lockers?

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் போல் செயல்பட்டு வந்த இளங்கோவனுக்குச் சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதில், ஏராளமான சொத்து ஆவணங்கள், நகைகள் சிக்கியுள்ளன.

 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். அதிமுகவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்து வரும் இவரை, கடந்த அதிமுக ஆட்சியின்போது கட்சியினர் நிழல் முதல்வர் என்றே சொல்லி வந்தனர். எடப்பாடி பழனிசாமி உடனான நெருக்கத்தால் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போதைய ஆளுந்தரப்புடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி,  எக்கச்சக்கமாகச் சொத்துகளைக் குவித்ததாக இளங்கோவன் மீது புகார்கள் கிளம்பின. 

 

இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து கடந்த அக். 22ம் தேதி புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவருடைய சொகுசு வீடு, முசிறியில் உள்ள அவருடைய மகன் நிர்வகித்து வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சேலம், சென்னை, கோவை, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள இளங்கோவனின் பினாமிகளுக்குச் சொந்தமான இடங்கள் என மொத்தம் 36 இடங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

 

இந்த சோதனையில் இளங்கோவனின் வீட்டில் இருந்து நேரடியாகப் பெரிய அளவில் சொத்துகள் கைப்பற்றப்படவில்லை. சில முக்கிய ஆவணங்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. அதேநேரம், அவருடைய பினாமிகளின் நகைக்கடைகள், வீடுகளில் இருந்து 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளி பொருள்கள், 34.28 லட்சம் ரூபாய் ரொக்கம், 70 கோடி ரூபாய்க்கான பங்குச்சந்தை முதலீட்டு ஆவணங்கள், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

சோதனையின்போது, இளங்கோவனின் வங்கி லாக்கர் சாவிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அந்த இரண்டு சாவிகளில் ஒன்று, இளங்கோவன் தலைவராக உள்ள மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் லாக்கர் உடையது; மற்றொரு சாவி, அயோத்தியாப்பட்டணம் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கர் உடையது ஆகும். இந்நிலையில் அந்த இரண்டு வங்கி லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (நவ. 30) திறந்து ஆய்வு செய்தனர். இந்தியன் வங்கி லாக்கரில் எதுவும் சிக்கவில்லை. 

 

ஆனால், சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆய்வு செய்தபோது அதிலிருந்து இளங்கோவனுக்குச் சொந்தமான சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த சொத்துகளின் விவரங்களை காவல்துறையினர் டைரியில் குறித்துக் கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தும் லாக்கரிலேயே வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் இளங்கோவன் முன்னிலையில் நடந்தன. இதையடுத்து லாக்கர் சாவிகள் இரண்டும், ஊழல் ஒழிப்புப்பிரிவு நீதிமன்றத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 

 

இது குறித்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரிடம் கேட்டபோது, ''இளங்கோவன் முன்னிலையில் அவருக்குச் சொந்தமான இரண்டு வங்கிகளில் உள்ள லாக்கர்களும் திறந்து சோதனை நடத்தப்பட்டது. ஒரு லாக்கரில் இருந்து 30க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்தன. அதிலிருந்த விவரங்களை கணக்கில் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய சொத்து விவரங்களுடன் இப்போது கிடைத்த சொத்து விவரங்களுடன் சரிபார்க்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றனர். 

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு கடன் சங்கம், அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு கடன் சங்கங்களின் லாக்கர்களிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கி லாக்கரில் நடந்த சோதனையில், இளங்கோவனுக்குச் சொந்தமான நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த விவரங்களை காவல்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

 

இச்சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.