Skip to main content

திருமண வரவேற்பில் இயற்கை வாழ்வியல்! - ருசியான பயிற்சிப் பட்டறை!

Published on 22/05/2022 | Edited on 22/05/2022

 

hjk


சிவகாசி நண்பரொருவர் “இன்று (22-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமைதானே..  திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் போவோமே.. அது வித்தியாசமான  அனுபவமாக இருக்கும்..” என்று அழைத்தார். உடன் சென்றோம்.   ‘பாரெங்கும் முழங்கட்டும் தமிழிசை’ என்ற வாசகம் தாங்கிய வரவேற்பு  பேனரைக் கடந்து உள்ளே சென்றோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாதிரியே  தெரியவில்லை. அங்கங்கே ஸ்டால்கள் போட்டிருந்தனர்.  நிகழ்ச்சிக்கு  வந்தவர்கள்,  ஒவ்வொரு ஸ்டாலிலும் நின்று கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டனர். ‘நீரிழிவுக்கு துவர்ப்பாகச் சாப்பிடுங்கள்’ எனத்  தென்னங்குருத்தைச் சீவிக் கொடுத்தனர்.  

 

நறுக்கப்பட்ட பப்பாளிப் பழம்  மற்றும்  தர்பூசணித் துண்டுகள், அன்னாசிப் பழச் சீவல்கள், அத்திப்பழங்கள்,  கொழுக்கட்டைகள், மண் குவளையில் மழை நீர், சாத்துக்குடிச்சாறு என விதவிதமாகத் தந்தனர். நர்சரி செடி, மரக்கன்றுகள் எனக் கொடுத்தபடியே  இருந்தனர்.   மணமகனின் தந்தை மாறன்-ஜி என்பவர்,  தாய்வழி இயற்கை உணவகம்  மற்றும் இயற்கை வாழ்வியல் இயக்கத்தை நடத்துபவராம். சிவகாசி சிரிப்பு  மன்றமும் கைகோர்த்து, இத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றனர்.   இயற்கை உணவுகள் இத்தனையையும் சாப்பிட்ட பலருக்கும்,  அங்கு ஏற்பாடு  செய்திருந்த இரவுச் சிற்றுண்டியைச் சாப்பிடுவதற்கு  வயிற்றில் இடம்  இல்லாமல் போனது. மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு திரும்பியவர்களின்  கையில் துணிப்பை ஒன்றினைத் தந்தனர். 

 

jk

 

அந்தத் துணிப்பையில், நோட்டு புத்தகம், ஆரோக்கிய வாழ்வுக்கான  விபரங்களை உள்ளடக்கிய புத்தகம், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதற்கான  சாஷே பாக்கெட்டுகள், நெல்லிக்காய், இஞ்சி, சீரகம், இந்துப்பு அடங்கிய நெல்லி  சுப்பாரி, நீரில்  கண்களைக் கழுவிப் பாதுகாப்பதற்கான குவளை,   வெள்ளரிக்காய், வாழைப்பழம், தேங்காய் மற்றும் மூலிகைப் பல்பொடி எனப்  பலவும் இருந்தன.   ‘பரபரப்பாக இயங்குகிறார்கள் மக்கள். இந்நிகழ்ச்சி வாயிலாக, உடல் நலம்  காப்பதில் சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என யோசித்தோம்.   இந்த ஏற்பாடுகளைச் செய்தோம்..’ என்றார்,  அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர்.   வந்தோமா, சாப்பிட்டோமா, மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்தோமா, கிளம்பினோமா என்ற அளவிலேயே பெரும்பாலானோர் உள்ள நிலையில்,  இயற்கை வாழ்வியலையும் ருசித்துத்தான் பாருங்களேன் எனப் பயிற்சிப்  பட்டறைபோல், அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது, பாராட்டுதலுக்குரிய  நற்செயலே! 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.