publive-image

Advertisment

விருத்தாச்சலம் அருகே நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் தர மறுத்ததால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு முகுந்தநல்லூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த குறுவை சாகுபடி நெல்லை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் தொரவளூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்ற விவசாயியின் நெல்லை, இயந்திரத்தின் மூலம் தூற்றி, கொள்முதல் செய்து கொண்டிருக்கும்போது, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க வேண்டும் என நிலைய அதிகாரி விஜயகுமார் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயி, “வறுமையின் காரணமாக, மூட்டைக்கு ரூ.50 கொடுக்க முடியாது. ரூ.30 ரூபாய் தருகிறேன்” என கூறியுள்ளார்.

Advertisment

ஆனால் நிலைய அதிகாரி விஜயகுமார், பழனிச்சாமியின் நெல் ஈரமாக உள்ளது எனக் கூறி, கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை, மீண்டும் விவசாயியின் சாக்கில் தொழிலாளிகள் மாற்றினர். இதனால் விவசாயி பழனிச்சாமி, செய்வதறியாமல் திகைத்து நின்றார்.

வாங்கிய கடனையும், குடும்ப செலவையும் சமாளிப்பதற்காக இரவு பகலாக கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தால் மூட்டைக்கு 50 கொடு, 100 கொடு என அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் நாங்க எங்கையா போவோம் என ஏழை, எளிய விவசாயிகள் செய்வதறியாது நிற்கின்றனர்.

லஞ்சம் தர மறுத்த விவசாயின் மூட்டையை, ஈரம் எனக் கூறி நிறுத்திய நிலைய அதிகாரி விஜயகுமார் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.