Skip to main content

"காதலியின் கணவரை எரித்து சாம்பலை ஆற்றுநீரில் கரைத்துவிட்டோம்..” -ஓராண்டுக்குப் பின் பிடிபட்ட குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

"We burned the girlfriend's husband and dissolved the ashes in river water."


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (26). இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை (22). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மணிமேகலை, பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அப்போது தனது மனைவியைப் பார்த்துவிட்டு வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பாலமுருகன். அதன்பின் ஓராண்டாக பாலமுருகனை காணவில்லை.

 

இது தொடர்பாக அவரின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பெயரில், போலீசார் கடந்த ஓராண்டாக பாலமுருகன் பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்தநிலையில் பாலமுருகனின் சொந்த ஊரரான ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (26) என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.


மணிகண்டனுக்கும், மணிமேகலைக்கும் இருந்த தகாத உறவை உறுதிப்படுத்திய போலீசார், மாயமான பாலமுருகன் விவகாரத்தில் இவர்களுக்கு உண்மை தெரியும் என்று கருதி அதன் அடிப்படையில் மணிமேகலையும் அவரது தகாத உறவினர் மணிகண்டனையும் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பாலமுருகனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதற்கு உடந்தையாக மணிகண்டனின் அண்ணன் தனசேகர் என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மணிமேகலை, மணிகண்டன், தனசேகர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தில், ”பாலமுருகன் மனைவிக்கும் எனக்கும் முறை தவறிய உறவு இருந்து வந்தது. இது ஓரளவு பாலமுருகனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. இந்தநிலையில்  2019ஆம் ஆண்டு மணிமேகலை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். மணிமேகலையைப் பார்க்கச் சென்ற பாலமுருகன் மணிமேகலைக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்துவிட்டு அந்த குழந்தை எனது சாயலில் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் வைத்தே மனைவி மணிமேகலையிடம் சண்டை போட்டு தகராறு செய்துள்ளார்.

 

Ad

 

அங்கிருந்து பாலமுருகன் சென்றுவிட்ட பிறகு இதுபற்றி மணிமேகலை எனக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தார். இனிமேல் பாலமுருகன் உயிரோடு இருந்தால் எங்கள் இருவருக்குமான தகாத உறவிற்கு இடையூறாக இருப்பார். அதனால் அவரது கதையை முடித்துவிட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். அதன்படி அன்றைய தினம் இரவு பாலமுருகன் வீட்டுக்குத் திரும்பி வந்ததை கண்காணித்துக் கொண்டு இருந்தேன். வீட்டில் அவர் மட்டுமே இருந்தார். இதையடுத்து நானும், அவரது வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டேன். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டோம். அதில் பாலமுருகன் தலையை நான் சுவரில் பிடித்து மோதினேன். பின்னர் அங்கிருந்த பித்தளை தவளையினால் அடித்தும் சுத்தியலால் தாக்கியும் அவரை கொலை செய்தேன்.

 

அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு எனது அண்ணன் தனசேகரனிடம் விவரம் தெரிவித்து இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டமிட்டோம். ஒரு சாக்கு பைக்குள் பாலமுருகன் உடலை வைத்து மூட்டையாகக் கட்டி மோட்டார் சைக்கிளில் நல்லாத்தூர் அருகே உள்ள வாய்க்காலுக்கு கொண்டு சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்குச் சென்றதும், பாலமுருகன் உடலை தீ வைத்து எரித்து சாம்பல் ஆக்கினோம். அந்தச் சாம்பலை அருகே உள்ள ஆற்று நீரில் கரைத்து விட்டோம்.

 

மேலும் உடல் எரிந்த பிறகும் அங்கு கிடந்த அவரது எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகளை பெரிய கற்களைக் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி தூள் ஆக்கினோம். அதையும் அள்ளிச் சென்று ஆற்றில் வீசி விட்டோம். பாலமுருகன் வீட்டில் நடந்த சண்டையால் அங்கு வழிந்த ரத்தம் போன்ற தடயங்களையும் சுத்தமாக அழித்துவிட்டோம். இதையடுத்து எதுவும் தெரியாதது போன்று இதுநாள்வரை ஊரில் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அதேநேரம் எனக்கும் பாலமுருகன் மனைவி மணிமேகலைக்கும் உள்ள தகாத உறவிற்கு எந்த இடையூறுகளும் இல்லாமல் இருந்துவந்தோம். இந்தச் சூழ்நிலையில்தான் போலீசார் எங்களை கண்காணித்து பிடித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார் மணிகண்டன்.

 

Nakkheeran

 

கொத்தனார் பாலமுருகன் மாயமாகி ஓராண்டுக்கு மேலான நிலையில் தற்போது அவர் மனைவி, அவரது தகாத உறவினர் மணிகண்டன், அவரது அண்ணன் தனசேகரன் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்து அவரது உடலை அடையாளம் தெரியாத அளவில் செய்துள்ள கொடூர செயலைக் கண்டு அப்பகுதியில் உள்ள சுத்துப்பட்டு கிராமமக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; கணவரின் வெறிச்செயல்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Husband's frenzy on extramarital affair in andhrapradesh

ஆந்திரப் பிரதேச மாநிலம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால், ராணி திருமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திவ்யாவுக்கும் அவர் பணிபுரிந்து வந்த அதே ஹோட்டலில் பணிபுரியும் ஜெயானந்தபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், ஜெயானந்தபால், சித்தூர் மாவட்டம் கல்லூர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜெயானந்தபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில், திவ்யாவின் கணவர் சந்திரய்யா, நான்தான் ஜெயானந்தபாலை கொலை செய்தேன் என கல்லூர் கிராம வருவாய் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக, கல்லூர் கிராம வருவாய் அதிகாரி, சந்திரய்யாவை பிடித்து காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், திவ்யாவுக்கும், ஜெயானந்தபாலுக்குமான உறவை அறிந்த சந்திரய்யா, திவ்யாவை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவருக்குமான உறவு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதனால், சந்திரய்யா ஜெயானந்தபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சந்திரய்யா போட்ட திட்டத்தின்படி, ஜெயானந்தபாலை சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூருக்கு அழைத்து வந்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் அங்கு ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் இருந்த ஜெயானந்தபாலை, அங்கு இருந்த பாறாங்கல்லை கொண்டு சந்திரய்யா அடித்து கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்திரய்யா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.