Skip to main content

ஊரெல்லாம் கடன் வாங்கி நாட்டுக்கு பெருமை சேர்க்க அனுப்புனோம்... அரசாங்கம் ஒரு வேலை கொடுக்க கூடாதா?

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

கடந்த 10  நாட்களுக்கு முன்பு மலேசியவில் உள்ள பினாங்கு மாநிலம் கெடா தீவில் நடந்த உலக சாம்பியன் சிலம்பாட்டப் போட்டியில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். பல நாட்டு வீரர்களும் அந்தந்த நாட்டு அரசாங்க செலவில் வந்து கலந்துகொண்ட நிலையில் இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் அதிலும் தமிழ்நாட்டில் இருந்து 80 வீரர் வீராங்கனைகள் அங்கே இங்கே கடன் வாங்கி நல்ல உள்ளங்களின் உதவியோடவும் போய் கலந்து கொண்டு அடுத்தடுத்து சிலம்பம்,  வாள் வீச்சு என்று தங்கம் வெள்ளிப் பதக்கங்களை வாங்கி குவித்து உலக சிலம்ப சாம்பியன் இந்தியா என்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்து முகம் மலர்ந்தனர். ஆனால் இவர்களுக்கு இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் என்ன செய்தது என்பது தான் கேள்விக்குறி..

 

sports

 

இந்த 80 பேரில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள வேம்பங்குடி என்னும் சின்ன கிராமத்தில் டீ கடை நடத்தி வரும்  தன் தாய், தந்தை, உறவினர்கள் ஆங்காங்கே கடன் வாங்கி வீரமணிகண்டன் என்ற இளைஞரை அனுப்பி வைத்தனர். சீனியர் பிரிவில் ஒற்றை வாள் வீச்சில் தங்கமும் குழு போட்டியில் வெள்ளி என இருபதங்கங்களையும் வென்று தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தார்.

அந்த இளைஞர் சொந்த ஊருக்கு வந்தபோது தாய் தந்தையுடன் உறவினர்களும் மகிழ்ந்தனர். நம்ம ஊரு புள்ள நாட்டுக்கே பெருமை தேடி தந்துட்டேய்யா என்று கொண்டாடினார்கள்.

 

sports

 

வீரமணிகண்டன் நம்மிடம்.. நான் நமது தற்காப்பு கலையை கல்லூரியில் போய் தான் கத்துக்க தொடங்கினேன். எனக்கு தனியார் கல்லூரி நிர்வாகமும் பயிற்சியாளரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அடுத்தடுத்து மாவட்ட, மாநில, தேசிய, ஆசிய போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்களை வாங்கி பயிற்சியாளருக்கான பட்டயத்தையும் வாங்கினேன். இப்ப உலக போட்டியிலும் வெற்றி பெற்றேன். ஆனா ஒரு அரசு வேலை தான் கிடைக்கல. நான் இப்ப பயிற்சியாளரா பலருக்கு பயிற்சி கொடுத்தாலும் தற்காப்புக் கலையான சிலம்பத்தையும் ஒலிம்பிக்ல சேர்த்தால் தான் செலவுகளையும் ஏற்கும் அரசு நல்ல வேலையும் கொடுக்கும் என்றார்.

கிராமத்தினரோ.. எங்க ஊரு புள்ள உலகப் போட்டிக்கு போறான்னு தெரிஞ்சதும் மகிழ்ச்சியடைஞ்சோம். ஊரெல்லாம் கடன் வாங்கி அனுப்புனாங்க. நாங்க நினைச்ச மாதிரி வெற்றி பெற்று இந்த நாட்டுக்கும் எங்க ஊருக்கும் பெருமை தேடி தந்துட்டான். ஆனா இந்த அரசாங்கங்கள் தான் இன்னும் இது போல ஜெயிச்சு வரும் புள்ளைகளை கண்டுக்கிறதே இல்ல. இவ்வளவு உழைச்சு ஜெயிச்சு வந்த வீரர்களுக்கு அரசாங்கம் ஒரு வேலையும், ஊக்கத் தொகையும் கொடுத்தால் நல்லாா இருக்குமே என்றனர்.

அரசாங்கம் நினைத்தால் வேலையும் கொடுக்கலாம் ஊக்கப்பரிசும் கொடுக்கலாம். இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது அரசாங்கம் நல்ல பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்போம்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.