Skip to main content

'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்' - பாஜக தலைவர் முருகன்

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

 'We accept Edappadi Palanisamy as the Chief Ministerial candidate' - says BJP leader Murugan !!

 

எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சியின் முடிவை பாஜகவும் ஏற்கிறது என அக்கட்சித் தலைவர் முருகன் தெரிவித்தார்.

 

சேலம் மாவட்டம் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் அணி மாநாட்டு திடலைப் பார்வையிடும் நிகழ்ச்சிக்காக, சென்னையில் இருந்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் செவ்வாய்க்கிழமை (பிப். 2) சேலம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் முருகன் கூறியது:

 

“நாட்டின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் நோக்கம் எதுவும் இல்லை.

 

முத்ரா திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம், பயிர்க் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களால் தமிழகம்தான் அதிகளவில் பயனடைந்துள்ளது.

 

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டத்தை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே இத்திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துள்ளார். அதிமுகவுடன் இணைந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணி தொடர்கிறது. எங்கள் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.

 

அதிமுக பெரிய கட்சி. அக்கட்சித் தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்கிறோம்.

 

தமிழகத்தின் மீது அக்கறை இருப்பதால்தான் பிரதமர் மோடி, மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு அறிவித்து வருகிறார். ராகுல் காந்தி வருகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளராது. இங்கே 3வது அணி அமையவும் வாய்ப்பு இல்லை.

 

சசிகலா தமிழகம் திரும்பிய பிறகுதான், அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும். அதன்பிறகு அரசியல் சூழ்நிலை குறித்து பார்க்கலாம். அதிமுக - அமமுக இணைப்பிற்கு பாஜக முயற்சிக்கவில்லை.” இவ்வாறு பாஜக தலைவர் முருகன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்