Skip to main content

மருமகளை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனை...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

vizhupuram asset issue

 

 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகில் உள்ள மழவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது சுப்பிரமணி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு முருகன், சின்னதுரை ஆகிய இரு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களுடைய மூத்த மகன் முருகன் மொத்த குடும்பத்தையும் அவரது மேற்பார்வையில் நடத்தி வந்துள்ளார். 

 

இந்த நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம், பம்புசெட் ஆகியவற்றை பாகம் பிரித்து தருமாறு முருகன் கேட்டுள்ளார். இந்த பாக பிரிவினையின்போது முருகனுக்கும் அவரது சகோதரர் தந்தை சுப்ரமணி, தாய் ராணி, தம்பி சின்ன பிள்ளை ஆகியோரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காரணம் மொத்த குடும்பப் பொறுப்புகளையும் முருகன் ஏற்று நடத்தி வந்ததால், அதன் மூலம் அனைவரும் சம்பாதித்து கொடுத்த பணத்தில் தனது மனைவி தனலட்சுமி பெயரில் தனியாக சொத்து வாங்கி உள்ளார். 

 

இதனால் முருகனுக்கு குடும்ப சொத்தில் பங்கு கிடையாது என்று அவர் தந்தை சுப்ரமணி, தாய் ராணி, தம்பி சின்னதுரை ஆகியோர் சேர்ந்து முருகனை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன், ஊர் முக்கியஸ்தர்களை அழைத்துவந்து பஞ்சாயத்தாரிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில் ஊர் முக்கியஸ்தர்களின் ஆலோசனைப்படி சகோதரர்களுக்குள் குடும்ப சொத்தில் பாகம் பிரித்து  கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் முருகன் மீது மேலும் கோபம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி முருகன் தனக்கு பாகம் பிரித்துக் கொடுத்த நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே கோபத்தில் இருந்த அவரது தந்தை சுப்பிரமணி, தம்பி சின்னதுரை, தாய் ராணி ஆகிய மூவரும் முருகனிடம் தகராறு செய்துள்ளனர். இந்த தகராறின்போது மூவரும் சேர்ந்து முருகனை கத்தியால் குத்தி உள்ளனர். 

 

முருகனுடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி தனலட்சுமி இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து தடுத்துள்ளார். உடனே இதை பார்த்த மூவரும் குடும்ப சொத்து பங்கு பிரிப்பதற்கு நீ தான் காரணம் என்று கூறி தனலட்சுமியையும் கத்தியால் குத்தி உள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே தனலட்சுமி உயிரிழந்துள்ளார். உயிருக்கு போராடிய முருகனை மீட்டு அருகில் உள்ள திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 

 

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் சின்னதுரை சுப்பிரமணி ராணி ஆகியோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி கூட்டு சதி ஆகியவை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே ராணி இறந்துபோனார். இந்த வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி, தீர்ப்பு வழங்கியுள்ளார். 

 

அதில் சின்னதுரை, சுப்ரமணி ஆகியோருக்கு கொலை மற்றும் கூட்டுச்சதி பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும் முருகனைக் கொலை செய்ய முயற்சித்ததற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து தந்தை, மகன் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராதிகா செந்தில் ஆஜரானார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.