Skip to main content

முரண்டு பிடித்த வியாபாரிகள்; அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்ட முயன்ற விவசாயிகளால் பரபரப்பு

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

viruthasalam farmers struggle govt officers

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், கம்பு, கேழ்வரகு, சோளம், மணிலா உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்ய எடுத்து வருவது வழக்கம்.

 

இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் ஆன்லைன் ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகளை ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இ-நாம் திட்டத்தில் விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றால் கிரேட் வாரியாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் தரத்தை பிரித்து வழங்கிய பின்புதான் விலை நிர்ணயம் செய்ய முடியும். உரிய இயந்திரங்கள் இருந்தும் தரம் பிரித்து வழங்குவதில்லை. செல்போன் மூலம் விலை நிர்ணயம் செய்ய சிக்னல்கள் சரிவர கிடைக்காது. விளைபொருட்களின் வரத்து அதிகம் இருக்கும் போது கொள்முதல் செய்ய காலதாமதம் ஆகும் என்பதால் செல்போனில் விலை நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக விளைபொருட்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தில் தொலைபேசி மற்றும் கணினி வாயிலாக விளைபொருட்களுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்காததால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மறு ஏல தேதி விவசாயிகளுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.  

 

இதனிடையே, மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்  தங்க. தனவேல் தலைமையில் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கடந்த  4  நாட்களாக மூடி வைத்த, வேளாண் விற்பனை குழு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கம் சார்பாக பாராட்டு விழா நடத்துவதாகக் கூறி  சந்தன மாலை, வெற்றிலை பாக்குடன் வந்ததுடன், அங்கிருந்த அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் கொடுத்து, அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து பாராட்ட முயன்றனர். மாவட்ட விற்பனை குழு செயலர் விஜயா விவசாயிகள் கொடுத்த இனிப்பை, வாங்க மறுத்ததுடன் பாராட்டையும் ஏற்க மறுத்து, அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

 

viruthasalam farmers struggle govt officers

 

இதேபோல சார் ஆட்சியர் பழனி, விவசாயிகள் கொடுத்த சாக்லெட்டை வாங்கிக் கொண்டு அவர்களைச் சமாதானப்படுத்தினார். அப்போது விவசாயிகள், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ-நாம் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை கூடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டும் கடந்த 2 வருடங்களாக மேற்கண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. வியாபாரிகள் வேண்டுமென்று நடைமுறைப்படுத்தாமல் லாப நோக்கோடு செயல்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், விற்பனை கூடத்தை மூடி வைத்துள்ளனர்.

 

இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பதில்லை. இ-நாம் திட்டம் குறித்து இதுவரை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. விளைபொருட்களை தரம் பிரித்து அரசு அறிவித்துள்ள அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்கவில்லை. எனவே, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மூடிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருட்களை கொள்முதல் செய்யாத நேரங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு 70 சதவீத அளவிற்கு கடன் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய சார் ஆட்சியர் பழனி, “டிசம்பர் 1 ஆம் தேதி முதல் சோளம் இ-நாம் திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும். விரைவில் அனைத்து பொருட்களும் இ-நாம் திட்டம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இன்று முதல் வழக்கம்போல ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறும்” எனத் தெரிவித்தார். இதனை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.