Skip to main content

‘‘உதயசூரியனுக்கு போட்டேன்; தாமரையில் லைட் எரியுது!” - ஒரு மணி நேரம் வாக்குப்பதிவை நிறுத்தி ‘பொசுங்கிய’ புகார்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

Virudhunagar Voter make trouble in casting vote

 

உதயசூரியன் சின்னம், குணசேகரன் கண்ணுக்கு மட்டும், தாமரையாகத் தெரிந்த அதிசயம், விருதுநகர் வாக்குச்சாவடி எண் 139-ல் நிகழ்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

விருதுநகர் நீராவி தெருவைச் சேர்ந்த இளைஞர் குணசேகரன், இன்று வாக்குச்சாவடி எண் 139-ல் வாக்குப் பதிவு செய்ய வந்தார். ‘அய்யோ.. நான் 1-வது பட்டனை (உதயசூரியன்) அமுக்கினேன். இரண்டாவது பட்டனில் (தாமரை) லைட் எரிகிறது. பெரிய கொடுமையாக இருக்கிறது’ என்று வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். அதனால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.  

 

விருதுநகர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரமணனுக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட, ‘தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தி சோதனை மேற்கொள்ளலாம்’ என்று அவர் கூற, திமுகவினர் அங்கு திரண்டுவிட, பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. புகாரளித்த குணசேகரனுக்கு வாக்களிப்பதற்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டது. வேட்பாளர்களின் நேரடி முகவர்கள் முன்னிலையில், அவர் மீண்டும் வாக்களித்தபோது, 1-வது பட்டனை அமுக்கினார். 1-வது பட்டனிலேயே லைட் எரிந்தது. குணசேகரன் சுட்டிக்காட்டிய தாமரை எப்படியோ,  முகவர்கள் முன்னிலையில் மாயமானது. 

 

“ஓட்டு மெஷின் நல்லாத்தானே வேலை செய்யுது. தேவையில்லாம பிரச்சனைய கிளப்பி ஒரு மணி நேரத்த வேஸ்ட் பண்ணிட்டாங்க. பப்ளிக்கயும் டென்ஷன் ஆக்கிட்டாங்க.” என்று அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காத்திருந்த வாக்காளர் ஒருவர் சத்தமாக புலம்பினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.