Skip to main content

டெல்லியில் பேச அமைச்சர்களுக்குத் திராணி இல்லை!- ஆர்ப்பாட்டத்தில் ராஜேந்திரபாலாஜி சாடல்!

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

virudhunagar district admk leaders rajendra balaji speech

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிராக தி.மு.க. அரசைக் கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். 

 

கடந்த 10 ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது  சொத்து வரி உயர்வு கிடையாது, மின் கட்டண உயர்வு கிடையாது, பஸ் கட்டண உயர்வு கிடையாது, விலைவாசி உயர்வு கிடையாது. ஏழைகளைப் பாதிக்கின்ற எந்தச் செயலையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியதில்லை. இன்றைக்கு ஆளும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படாமல், விலைவாசி உயர்வு குறித்து கவலைப்படாமல் விளையாட்டு மோகத்தில் இருக்கிறார். விளையாட்டு போட்டிகளைக் கண்டுகளிக்கிறார். அங்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

 

virudhunagar district admk leaders rajendra balaji speech

 

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை, 18 சதவீதமாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் என்னுடைய முயற்சியால் குறைக்கப்பட்டது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைத்ததும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் என்னுடைய முயற்சியால் நடந்தது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பாதிப்பு குறித்து டெல்லியில் போய் பேசுவதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் யாருக்கும் திராணி இல்லை. தெம்பு இல்லை. இருப்பதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவோம் என்ற நினைப்பில்தான் ஆட்சி நடத்துகின்றனர். நல்லவிதமான மக்கள் திட்டங்கள் எதையும் செய்வது கிடையாது. நின்றால் வரி, உட்கார்ந்தால் வரி, நடந்தால் வரி என எதற்கெடுத்தாலும் வரி விதித்தால், என்ன நியாயம்? எப்படித்தான் சாப்பிடுவது?  

 

கடும் விலைவாசி உயர்வைத் தட்டிக் கேட்பதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. சட்ட மன்றத்திலும் கேட்பதில்லை. வெளியிலும் கேட்பதில்லை. இதையெல்லாம் பேசக்கூடிய இடத்திலுள்ள ஒரே கட்சி அதிமுகதான். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சிறுமைப்படுத்தி, மத்திய அரசைக் கேவலப்படுத்தும் பணியைச் செய்கிறார்கள். மத்திய அரசிடம் பேசி ஏராளமான நிதிகளைப் பெற்று தமிழக மக்களுக்குத் தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்கு தி.மு.க.வில் ஆள் இல்லை. இப்போது இருக்கின்ற நிலைமை மாறவேண்டும் என்றால் ஆட்சி மாற்றம் வரவேண்டும்” எனப் பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.