Skip to main content

கலெக்டர் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்..!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Virudhunagar Collector Meganathan

 

உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். பணியே உயர்ந்தது. ஐ.ஏ.எஸ். என்பது, அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணியாகும். ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளைச் செய்ய முடியும்.

 

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எப்படி இருக்க வேண்டுமென்றால் – தனது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக்கொண்டு, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.

 

ஐ.ஏ.எஸ். பணிக்கான தகுதிகள் என்னவென்றால் – நேர்மறை எண்ணம், தலைமைத்துவ பண்பு, ஆளுமைத்திறன், தைரியம், உறுதியான மனப்பாங்கு, தன்னம்பிக்கை, ஒவ்வொரு நெருக்கடியான சூழலிலும் அமைதியைக் கடைப்பிடித்தல், நல்ல அறிவுத்திறன், சிறப்பான பொதுஅறிவு, நல்ல தகவல்தொடர்பு திறன் எனப் பட்டியலிடலாம். 

 

Virudhunagar Collector Meganathan

 

‘எந்த மாவட்ட கலெக்டரும் சொல்லாததை, செய்யாததை, சின்னஞ்சிறு பிள்ளைகளும்கூட, கலெக்டர் பெயர் ‘மேகநாத்’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார், நமது விருதுநகர் மாவட்ட கலெக்டர்.’ என்று ‘ட்வீட்’ செய்துள்ளார், மணிகண்டன். ‘எல்லா மாவட்டத்துக்கும் உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால், அரசுப் பள்ளி கண்டிப்பாக முன்னேறிவிடும். கொடுத்து வச்ச விருதுநகர் மாவட்டம்.’ என்கிறார் சசிகுமார். 

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டப்படுவது ஏன்?

 

ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ். பொதுமக்களின் குறைகளை அறிந்து பதிலளிப்பதுடன், பிரச்சனைகளுக்குத் தீர்வும் காண்கிறார். 

 

Virudhunagar Collector Meganathan

 

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை குறித்த தகவலை தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார் மேகநாத ரெட்டி. பதிலுக்கு மாணவர்களும் நன்றி தெரிவித்துவருகின்றனர். அதற்கு மேக்நாத ரெட்டி ‘தம்பிகளா நன்றியெல்லாம் போதும்.. சோசியல் மீடியாவை மூடிவிட்டு, சோசியல் சயின்ஸ் புத்தகத்தைக் கையில் எடுத்துப்  படியுங்கள். நாளை பள்ளியில் தேர்வு நடக்கிறது.’ என்று மாணவர்களுக்கு ஒரு அண்ணனாக இருந்து அன்புடன் அறிவுறுத்தியுள்ளார். மக்களிடம் காட்டிவரும் இந்த நெருக்கம்தான், அவரைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.


 
அதேநேரத்தில் ‘கடையைத் திறந்தோமா? காலேஜ் இல்லைன்னு சொன்னோமான்னு இருங்க தெய்வமே! மழையில் சாப்பிட்டு தூங்குபவனைப் படிக்கச் சொல்லி கொடுமைப்படுத்த வேண்டாம், தெய்வமே!’ என்று உரிமையுடன் ரீ ட்வீட்டில் கலெக்டரையே கலாய்க்கும் ஹரிஹரன் போன்ற பொதுஜனமும் இல்லாமல் இல்லை.  

 

பழனி ராஜ்குமார் போன்றவர்களோ ‘மக்களுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் சரிதான்! பல வருடங்களாக வைப்பாறு தூர்வாராமல் கிடக்கிறதே? கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறதே? இதற்கெல்லாம் என்ன உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்? அரசாங்கமோ, அமைச்சரோ செயல்படுவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பித்ததுபோல் தெரியவில்லையே?’ என்று மாவட்டத்தின் தேவைகளைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவும் செய்கின்றனர்.

 

ஹரீஸ் என்பவர் ‘சமூக வலைத்தளங்களில், ஒரு மாவட்ட ஆட்சியரால் மக்களை இந்த அளவுக்கு நெருங்க முடிகிறதென்றால், தற்போதைய அரசாங்கம், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரியின் கைகளைக் கட்டிப்போடாமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதுதான்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

மக்கள் கேள்வி கேட்பதும், மாவட்ட ஆட்சியர் பதிலளித்து தீர்வு காண்பதும், அரசாங்கம் இவற்றுக்கு இசைவதும் ஆரோக்கியமான செயல்பாடுகள் அல்லவா!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.