விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகள் நந்தினி(26). நந்தினிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் சுரேஷ் (வயது 35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, நந்தினி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
இது குறித்து, நந்தினியின் தாய், செஞ்சி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "கடந்த தீபாவளிக்குமுன், நந்தினி கணவர் சுரேஷ் மற்றும் அவரின் பெற்றோர் சேர்ந்து நந்தினியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதையடுத்து, நந்தினி எங்களது வீட்டில்வந்து தங்கினார். கடந்த 27ஆம் தேதி இரவு நந்தினியின் குழந்தைக்குப் பிறந்த நாள் வந்தது.
அந்தப் பிறந்தநாளை, மகளுடன் சேர்த்து கொண்டாடினோம். இதனை அறிந்த சுரேஷ், கோபத்துடன் நந்தினியிடம் வந்து தகராறு செய்தார். அப்போது, நந்தினியை அடித்துக் கொலை செய்துள்ளார். எனவே எனது மகளை அடித்துக் கொலை செய்த சுரேஷ் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.
அந்தப் புகாரின்பேரில் செஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்ரமணியம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மகளை அடித்துக் கொலை செய்ததாக மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மாமியார் புகார் அளித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.