Skip to main content

பெண்களைக் கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த கும்பல்! 

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

viluppuram theft and woman case police caught one

 

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது கண்டப்பன் சாவடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் தஷ்ணமூர்த்தி, இவரது மனைவி 80 வயது சரோஜா, இவரது மகள் 60 வயது பூங்காவனம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவனத்தை அம்மணங்குப்பம் என்ற கிராமத்தில் தங்கவேலு என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தனர். அவர்களுக்குத் தற்போது 29 வயதில் வள்ளி என்ற மகள் உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகள் வள்ளியுடன் பூங்காவனம் தனது தாய் சரோஜா உடன் வசித்துவருகிறார். 

 

நேற்று முன்தினம் (06.12.2021) வள்ளி மட்டும் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றதால் சரோஜா, பூங்காவனம் ஆகிய இருவரும் அன்று இரவு வீட்டில் படுத்துத் தூங்கியுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, சரோஜா வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கே சரோஜாவும் அவரது மகள் பூங்காவனமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். 

 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அதுகுறித்து கண்டமங்கலம் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சரோஜா வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாய், மகள் இருவரையும் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதலிருந்து தப்பிக்க அவர்கள் போராடியுள்ளனர். இதனால் அவர்களை அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு சென்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அதேபோன்று அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்துகொண்டிருந்தபோது அங்குள்ள செங்கல் சூளையில் கல்லிறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த நாகலிங்கம், அவரது மனைவி அம்சம்மாள் ஆகிய இருவரும் அங்குள்ள குடிசையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் குடிசைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அம்சம்மாளை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அவர் கத்திக் கூச்சல் போட்டதும் மர்ம நபர்கள் அவரை பலமாக தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அம்சம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். 

 

இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்துவருகின்றனர். அதேபோல், இப்பகுதியில் உள்ள கலித்திறம் பட்டு, வம்பு பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள அம்மன் கோவில், அய்யனார் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியலை உடைத்து, கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவமும் நடந்துள்ளது. இதனையும் அதே குழுவைச் சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

இந்த நிலையில், தனிப்படை போலீசார் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் 30 வயது கவிதாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து கொலை செய்யப்பட்ட சரோஜா, பூங்காவனம் ஆகியோர் அணிந்திருந்த நகைகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர் அந்தப் பெண்களைக் கொலை செய்த கொலையாளி என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது