Skip to main content

வாக்குவாதத்தில் போலீசார்கள் மீது தாக்குதல்... பேச்சுவார்த்தைக்கு சென்ற கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்... 

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
Villupuram

 

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர் கிராமம். ஊர் காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துராமன். வயது 30. கூலித் தொழிலாளியான இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டித் தருமாறு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்துள்ளார். அதற்காக முதல் தவணை பணம் கொடுத்துள்ளார். 


அதன்படி வீடு கட்டும் பணி துவங்கி அடித்தளப்பணியோடு நிறுத்திவிட்டு முத்துராமனிடம் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாவது தவணையாக பணம் கேட்டுள்ளார். இதனால் சுபாஷ் சந்திர போசுக்கும் முத்துராமனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஆனத்தூர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலுவிடம் ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திர போஸ் சென்று முறையிட்டுள்ளார்.

 

அது விஷயமாக சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ்காரரை அழைத்துக்கொண்டு முத்துராமனிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது முத்துராமன் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் இருவரையும் தாக்கியதாகவும் அதில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதோடு இரண்டு பற்களும் உடைந்தனவாம். இதனால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

 

இந்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜேந்திரன், டிஎஸ்பி நல்லசிவம், தாசில்தார் வேல்முருகன், பிடிஓ முபாரக் அலி, திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் கூறினர். இருந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.