Skip to main content

சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு! - குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்களுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

villupuram child incident chennai high court police

 

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரையைச் சேர்ந்த சிறுமி ஜெயஸ்ரீ, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அ.தி.மு.க. பிரமுகர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் 10- ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகிலுள்ள சிறுமதுரையில் கடை நடத்தி வந்த ஜெயபால் மீதிருந்த முன்விரோதம் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்துவந்த அவரது மகள் ஜெயஸ்ரீ என்ற சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும், வீட்டில் தனியாக இருந்தபோது, கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன்,  கலியபெருமாள் ஆகிய இருவரும், தந்தை மீதிருந்த முன்விரோதம் காரணமாக, தன்னை தீவைத்து எரித்ததாகத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டு, அவர்களை திருவெண்ணெய் நல்லூர் போலீசார் கைது செய்த நிலையில், கடந்த மே மாதம் 30- ஆம் தேதி,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

 

அதன்படி இருவரும் தற்போது கடலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முருகனின் மனைவி அருவி மற்றும் கலியபெருமாளின் மனைவி சவுந்தரவள்ளி ஆகிய இருவரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

மனுவில், ஆதாரங்கள் இல்லாமல், உள்நோக்கத்துடன் தங்கள் கணவர்கள் இவ்வழக்கில் சேர்க்ககப்பட்டுள்ளதாகவும், வழக்கின் ஆவணங்கள் தங்களுக்குத் தமிழில் தரப்படவில்லை என்றும், இருவரும் தானாகவே முன்வந்து சரணடைந்த போதும், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தது போல திரித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, முருகனின் மனைவி, அவரது செல்போன் அழைப்பு விவரங்களையும், காவல் நிலையத்தின் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும், உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டுமென, தனியாகக் கோரியுள்ளார்.

 

தங்களின் கணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, அவர்கள் மீது பிறப்பித்த குண்டாஸ் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, இன்று (01/07/2020) நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ். சரவணகுமார் ஆஜராகி,  மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். 

 

http://onelink.to/nknapp

 

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு குறித்து உள்துறைச் செயலர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கடலூர் சிறைத் துறை கண்காணிப்பாளர் மற்றும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்