Skip to main content

அமைச்சர் விதைத்த விதை.. அரசுப் பள்ளிகளை ஹைடெக்காக மாற்றும் கிராமங்கள்! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

 Villages that will convert government schools to high tech!

 

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 'எல்லாருக்கும் எல்லாமும்' கிடைக்க வேண்டும் என்பது தமிழக முதல்வரின் எண்ணமாக உள்ளது. அப்படி ஒரு அரசுப் பள்ளிகள் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியிலும், பச்சலூரிலும் உள்ளன. இரு பள்ளிகளையும் ஹைடெக்காக மாற்றி தமிழகத்தின் முதன்மை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றியவர் தலைமை ஆசிரியர் ஜோதிமணி. 

 

இந்த நிலையில் தான், கடந்த வாரம் வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் அப்பள்ளி மாணவி சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் ஒன்று 'ஸ்மார்ட் வகுப்பறை' தங்களுக்கு தேவையான கட்டமைப்பை மாணவர்களே கேட்டதைப் பார்த்து நெகிழ்ந்த அமைச்சர் மாணவியிடம் அந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டவர், அதே மேடையில் பேசும் போது, ”மாணவியின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் அதில் முதல் கோரிக்கையான ஸ்மார் கிளாஸ் கோரிக்கை. இதனை நிறைவேற்ற ரூ.35 ஆயிரம் பணத்தை மாணவியிடமே வழங்குகிறேன். இந்த தொகையை நமக்கு நாமே திட்டத்தில் செலுத்தி அரசு பங்களிப்பாக மேலும் 2 மடங்கு தொகையை பெற்று ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கலாம் என்றவர் இதே போல அனைத்து பள்ளிகளும் ஹைடெக்காக மாறவேண்டும்” என்றார்.

 

ஆண்டு விழா முடிந்ததும் புள்ளாச்சி குடியிருப்பு மக்கள் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்விப்பயணமாக சென்று பார்த்ததும், இதே போன்ற பள்ளியை எங்கள் பள்ளியிலும் உருவாக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து நிச்சயம் உதவுவதாக கூறியதோடு நவீன வகுப்பறைகள் அமைக்க பச்சலூர் பள்ளி ஆசிரியர்களின் பங்காக ரூ.35 ஆயிரம் வழங்கி மேலும் நெகிழச் செய்தார். அடுத்து பெற்றோர்கள், தன்னார்வலர்களின உதவியோடு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புள்ளாச்சிகுடியிருப்பு பள்ளி கட்டமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

 

இதைப் பார்த்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி ஆலோசனைப்படி திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் பச்சலூர் பள்ளிக்கு சென்று பார்த்ததோடு இதே போல பள்ளியை மாற்றியமைக்க ஆர்வமுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலாண்மைக் குழு, ஆகியோரின் கருத்தறிய முதல் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் "ஒரு முறை எங்க பள்ளிக்கு வந்து பாருங்க. முதல்வரை அழைக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்" என்ற தலைப்பில் உள்ள பச்சலூர் பள்ளி பற்றி நக்கீரன் வெளியிட்ட வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.

 

கூட்டத்தில் கீரமங்கலம் மேற்கு, கிழக்கு, பனங்குளம் கிழக்கு, செரியலூர், சேந்தன்குடி, புதுக்கோட்டைவிடுதி ஆகிய பள்ளியிலிருந்து கலந்து கொண்டனர். பெற்றோர்கள், ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பச்சலூர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி பதில் கூறினார். மன நிறைவடைந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் கோடை விடுமுறையிலேயே அதற்கான பணிகளை தொடங்குவதாக உற்சாகமாக புறப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேரூராட்சி தலைவர் சிவக்குமார், கீரமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளியாக மாற்றியமைக்க இருக்கிறோம் என்றார். உள்ளாட்சிப் பிரதிநிகளும் கலந்து கொண்டனர்.

 

புள்ளாச்சி குடியிருப்பில் அமைச்சர் போட்ட ஸா்மார்ட் கிளாஸ் என்ற விதை பல்வேறு கிராம பள்ளிகளிலும் முளைக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.