Skip to main content

மின்சாரம் இல்லை; விறகு கட்டையே மெழுகுவர்த்தி; அவல நிலையில் கிராமங்கள்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

Villagers without electricity due heavy rains Sirkazhi

 

‘ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு. இப்படி ஒரு பேய்மழைய இதுவரைக்கும் நாங்க பாத்ததே இல்ல’ எனக் கண்ணீர் வடிக்கும் கிராம மக்கள், மெழுகுவர்த்தி வாங்கக் கூட காசு இல்லாமல், வெளிச்சத்திற்காக விறகுகளைப் பற்ற வைக்கும் அவலம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது.

 

வங்கக்கடலில் மையம் கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்த வண்ணம் இருக்கிறது. அதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் ஆகிய முக்கிய இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கேவரோடை, இரவுக்கொள்ளை உள்ளிட்ட கிராமங்களின் பிரதான சாலைகள் வெள்ளநீரால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே சென்று வர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்த நிலையில், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தனர். கனமழை காரணமாக கடந்த சனிக்கிழமையிலிருந்தே பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் அளவு குறைந்தால் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும். 14ம் தேதி காலைக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.

 

Villagers without electricity due heavy rains Sirkazhi

 

இதுவரை 21 கிராமங்களில் மழைநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது என அரசுக் கணக்கெடுப்பு கூறுகிறது. அந்தக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் மின்சாரம் இல்லாததால் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். பலவிதமான விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் இரவு முழுவதும் தூங்காமல் பொதுமக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மேலும், மெழுகுவர்த்தி வாங்க கூட வழி இல்லாமல் வீட்டின் வாசலில் காய்ந்த விறகு சுள்ளிகளை வைத்து நெருப்பு மூட்டி பொதுமக்கள் இரவுப் பொழுதைக் கழித்து வருகின்றனர். அது மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் நிலத்தடி நீரையே குடிநீராகப் பயன்படுத்தும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து, “நாங்க எத்தனையோ பெருமழையையும், புயலையும் பார்த்திருக்கோம். ஆனா, இப்படியொரு பேய்மழையை எங்க வயசுல பாத்ததில்ல. ஒரே ராத்திரில எங்க வாழ்க்கையே அழிஞ்சி போகுற மாதிரி ஆயிடுச்சு” என அந்தக் கிராமத்து மக்கள் கண்ணீர் மல்க பேசியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கரை ஒதுங்கிய மர்மப் பொருள்; பதற்றத்தில் மீனவ கிராமம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Mysterious object washed ashore in Sirkazhi; A fishing village in tension

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் 'அபாயம் தொட வேண்டாம்' என  ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றுள்ளனர் போலீசார். இது அந்த மீனவ கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.