Skip to main content

சொத்துக் குவிப்பு வழக்கு; நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் அவரது மனைவி ஆஜர் 

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

 Vijayabaskar and his wife Ramya appeared before court of hoarding  assets case

 

கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 8 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.

 

இந்நிலையில்  கடந்த 17.10.21 அன்று வருமானத்தை விட ரூ. 35 கோடியே 79 லட்சத்து 81 ஆயிரம் வரை அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதாவது வருமானத்தை விட 54 சதவீதம் கூடுதலாக விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா உள்ளிட்ட குடும்பத்தினர் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப்  பதிவு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 18.10.21 அன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இலுப்பூர், சென்னை வீடுகள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ரூ. 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 4.87 கிலோ தங்கம் 3.75 கிலோ வெள்ளி பொருட்கள், 136 கனரக வாகன பதிவு ஆவணங்கள், 19 ஹார்ட் டிஸ்க்கள், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இந்த சோதனையைத் தொடர்ந்து கடந்த 22.5.23 அன்று 216 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதனுடன் சுமார் 10 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 800 சொத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கின் முதல் விசாரணை ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் அன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரது மனைவி ரம்யா அன்று ஆஜராகாத நிலையில் 29ம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

அதன் அடிப்படையில் இன்று 29 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இன்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றம் வருவதால் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர். தொண்டர்கள் படை சூழ நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜரானார். இதேபோல் அவரது மனைவி ரம்யா மற்றொரு வழியில் வந்து வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை படம் எடுக்க சில வழக்கறிஞர்கள் தடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சிறிது நேரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்