தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனிடையே, மழை பாதிப்பிற்கு அரசு அலட்சிய போக்கே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், அந்த அறிக்கையில், “எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் நினைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விஜய் சொன்னது சரியான கருத்து” என்று பதிலளித்தார்.