Skip to main content

ஓசூர் ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டியல் போட்டு லஞ்சம் வசூல்; அதிரடி சோதனையில் 1.51 லட்சம் ரூபாய் பறிமுதல்!!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

vigilance officers raid at hosur rto office. then seizured the money

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.51 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய இருசக்கர, நான்கு வாகனங்கள் பதிவு செய்தல், இலகுரக, கனரக வாகனங்கள் பதிவு, ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் வழங்குதல், பெயர் மாற்றம் செய்தல், தகுதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. 

 

இங்கு ஆர்டிஓவாக ஈஸ்வரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர்களாக தரணிதரன், விஜய்குமார் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர், உதவியாளர் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

 

இந்த அலுவலகத்தில் வாகனங்கள் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு சேவைகளுக்கும் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும், லஞ்சம் கொடுத்தால்தான் அரசு சேவைகளையே செய்கின்றனர் என்றும் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. 

 

அதிரடி சோதனை நடத்த காத்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், நவ.25- ஆம் தேதி மாலையில் அந்த அலுவலகத்தில் திடீர் சோதனையில் இறங்கினர். 

 

டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன், ஆய்வாளர் முருகன், எஸ்ஐ ஆறுமுகம், தலைமைக் காவலர்கள் மஞ்சுநாத், பிரபாகரன், ராஜா, சந்திரசேகர், நரேஷ்குமார் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு 09.00 மணி வரை இந்த சோதனை நடந்தது. அந்த அலுவலகத்தில் இருந்து ஆர்டிஓ உள்பட ஊழியர்களின் மேஜை டிராயரில் இருந்து கணக்கில் வராத 1.51 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

 

ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் வழங்குதல், வாகனங்கள் புதுப்பித்தல், தகுதிச்சான்றிதழ் வழங்குதல் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக பட்டியல் போட்டு லஞ்சம் வசூலித்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. லஞ்சப்பணத்தில் யார் யாருக்கு பங்கு செல்கிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் வட்டார போக்குவரத்துத் துறை மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.