![Vice President of Opposition seat; Again, AIADMK made the demand](http://image.nakkheeran.in/cdn/farfuture/CSj8Q2ieC7IOGsS6mY_mjbWyu95MmW_SM3B0wOAynoo/1696826156/sites/default/files/inline-images/a1794.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை தொடங்க உள்ளது. இன்று கூடும் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பைப் பேரவைத் தலைவர் அப்பாவு வாசிக்க உள்ளார். காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபாநாயகருடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். அதிமுகவின் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்குமாறு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.