Skip to main content

சிறைக் கைதி மரணம் தொடர்பாக த.வா.க தலைவர் வேல்முருகன் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்! வீடியோ ஆதாரங்கள் ஒப்படைப்பு!

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

Velmurugan disclosed video evidence to CBCID

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன்(40). இவருக்கு, பிரேமா என்ற மனைவியும், மதன்(26) என்ற மகனும், 12 வயது மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்துவந்த இவர்கள், தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தனர்.

 

இந்நிலையில், கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26-ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினைப் பறித்ததாக, செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 30.10.2020 அன்று விருத்தாசலம் கிளைச்சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 02.11.2020 அன்று செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்பு மீண்டும் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் 04.11.2020 அன்று இரவு வலிப்பு ஏற்பட்டதாகக்கூறி, செல்வமுருகன் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.

 

அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் செல்வமுருகன். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. மேலும், காவல்துறையினர்  குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில், குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன் செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 

அதேசமயம் செல்வமுருகன் மனைவி பிரேமா, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம், 'தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் புகார் மனு அளித்தார். அத்துடன் உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை - கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 


இதனிடையே, 'காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகவும், அவரது இறப்பிற்கு நீதி மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்' என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.

 

அதேசமயம்  விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து விசாரணை செய்து வந்தார். அதேபோல் கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்து வருகிறது. மேலும், செல்வமுருகன் மனைவி பிரேமா கோரிக்கை வைத்ததன் பேரில், டி.ஐ.ஜி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) குணவர்மன் தலைமையிலான போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர். 

 

இதனிடையே சிறைக்கைதி மரணத்தில் கைதியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்ட நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கூறி கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.  

 

அதேசமயம், தனது கணவர் சாவில், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தைக் கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் கூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா, சடலத்தை வாங்காமல் இருந்து வந்தார். மேலும் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக்கோரி பிரேமா தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'விருத்தாசலம் குற்றவியல் நீதிபதி இதுகுறித்து முடிவெடுக்கலாம்'  என்று கூறி கடந்த 18-ஆம் தேதி, வழக்கினை முடித்து வைத்தது.
 

cnc

 

அதையடுத்து பிரேமா, 'மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்கக் கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது மருத்துவப் பேராசிரியர் ஒருவர், 2 மருத்துவர்கள், தான் மற்றும் தனது வழக்கறிஞர் என 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்கக் கோரியும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், 'ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார். 

 

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செல்வமமுருகனின் சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

 

Velmurugan disclosed video evidence to CBCID

 

அதையடுத்து, நேற்று மதியம் செல்வமுருகன் சடலம் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்னிலையில், ஜிப்மர் மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். இந்த மருத்துவப் பரிசோதனையில், பிரேமா மற்றும் அவரது வழக்கறிஞர், உறவினர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். உடற்கூறு ஆய்வு முழுவதும் வீடியோ பதிவு எடுக்கப்பட்டது. பின்னர் செல்வமுருகனின் சடலம், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சடலம் அவரது சொந்த ஊரான காடாம்புலியூர் கொண்டுசெல்லப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறந்து 23 நாட்கள் கழித்து அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது.  

 

இதற்கிடையே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், "போலீசார் தாக்கியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகக் கூறி சில வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். அதையடுத்து வேல்முருகனை தொடர்புகொண்ட போலீசார் கடலூர் சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் ஆஜராகி வீடியோ ஆதாரங்களைக் ஒப்படைத்தால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

 

அதனைத் தொடர்ந்து வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் ஆஜராகி துணைக் காவல் கண்காணிப்பாளர் குணவர்மனிடம் செல்வமுருகன் மரணம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தார். அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் ஒரு மணிநேரம் வேல்முருகனிடம் விசாரணை நடத்தினர்.

 

விசாரணைக்குப் பிறகு வெளியேவந்த வேல்முருகன், "செல்வமுருகன் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டு, 3 நாட்கள் சித்தரவதை செய்யப்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த அக்டோபர் மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதி செல்வமுருகனை தனியார் விடுதியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததற்கான சி.சி.டி.வி வீடியோவும், 29-ஆம் தேதி செல்வமுருகன் போலீஸ் காவலில் இருப்பது போன்ற ஆவணங்கள் தயார் செய்து இருந்ததையும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்தேன். அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதுமட்டுமின்றி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.  

 

nkn

 

மேலும், நகைக் கடை மற்றும் விடுதியில் உள்ள வீடியோ ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதைத் தடுக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுத்ததுபோல், இந்த வழக்கிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையால் ஆஜராகி, வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளேன்.  இந்த விசாரணை திருப்தி இல்லை என்றால் மீண்டும் மேல்முறையீடு செய்வேன். தமிழகத்தில் காவல்துறையினர் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். இதனால், போலீசார் மீதான புகார்கள் குறித்து, காவல்துறை விசாரித்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.