Skip to main content

தற்காலிக மார்க்கெட்டில் தடையை மீறி காய்கறி விற்பனை! தடுக்க முயன்ற போலிசாரிடம் வியாபாரிகள் வாக்குவாதம்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
Vellore netaji market

 

வேலூர் நேதாஜி மார்க்கெட் மிகவும் பரபரப்பானது. ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகள் இங்கு வந்து பகல் - இரவு என காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி செல்வர். இங்கு கரோனா பரவியதை தொடர்ந்து பரிசோதனை முகாம் நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு கரோனா இருப்பது உறுதியானது.

அதனால் மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபாரக் கடைகள் அனைத்தும் கோட்டை பின்புறம் உள்ள மாங்காய் மண்டி அருகே உள்ள காலி இடத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கு வியாபாரிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சில்லறை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். ஆனால் இங்கு முதல் நாளிலேயே பொதுமக்களுக்கு சில்லறையாக விற்பனை செய்தனர். வியாபாரிகளும் சிறிதும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக கூடுவதால் இங்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மொத்த விற்பனை கடைகளுக்குள் வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Vellore netaji market

 

பொதுமக்கள் உள்ளே செல்லாமல் இருக்க காய்கறி கடைகள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தின் நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அங்குள்ள மொத்த வியாபாரக் கடைகள் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

உத்தரவை மீறி இந்த பகுதியில் ஏராளமானோர் சில்லரை விற்பனை கடைகள் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்களும் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதனால் சமூக  இடைவெளி இல்லாத நிலை ஏற்பட்டது.

எங்கு பார்த்தாலும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனர். காலை 5 மணிக்கு முன்னதாக மார்க்கெட் முழுவதும் கடைகள் அடைக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் காலை 7 மணி வரை வியாபாரம் நடந்தது. 

இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் இதனை தடுக்க முடிவு செய்து கடையை மூடுமாறு கூறினர். இதனால் போலிசாரிடம் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக போலிசார் வரவழைக்கபட்டு வியாபாரிகளை கலைந்து செல்ல செய்தனர், மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தோடு வியாபாரிகள் ஒத்துழைப்பு தராதது அதிகாரிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.