Skip to main content

“இரமலான்; சகோதரத்துவத்தைப் பேணும் மகத்தான திருவிழா..” - திருமாவளவன்

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

VCK Leader Thirumavalavan's Ramzan Greeting

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் ஒரு மாதம் நோன்பு இருந்து இன்று இரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இரமலான் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

 

அந்தவகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முப்பது பிறை கண்டு இரமலான் நோன்பை நிறைவு செய்யும் இஸ்லாமிய பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் ஐவகை கடமைகளுள் ஒன்றாக இந்த முப்பது நாள் நோன்பையும் கடைபிடித்து வருகின்றனர். உலகமெங்கும் வாழும் இஸ்லாமியர் யாவரும் இரமலான் பண்டிகையை ஒரே வகையான நடைமுறையில் பின்பற்றுவதன் மூலம், தாங்கள் ஒட்டுமொத்தமாக ஒரே சமூகக் குழுவினர் என்னும் உணர்வைப் பெறுகின்றனர்.


மொழி, இனம், நாடு என்னும் அடையாளங்களால் பிளவுண்டு சிதறிக் கிடந்தாலும் இஸ்லாமியர் என்னும் மதம்சார்ந்த அடையாளத்தால் ஒருங்கிணைந்த ஒரே சமூகமாக உணர்வதற்கான வாய்ப்பை இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் உருவாக்குகின்றன. எனவே, இரமலான் பண்டிகை என்பது வெறும் ஆரவாரங்களைக் கொண்ட விழாவாக அமையாமல், ஓர் சமூக ஒழுங்கமைவுக்கான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டதாக விளங்குவதைக் காணமுடிகிறது. ஆண்டுதோறும் இத்தகைய நோன்பைக் கடைபிடிப்பதன் மூலம் தனிநபர் ஒழுங்கும், சமூக ஒழுங்கும் சம காலத்தில் ஒருசேர வலிமை பெறுவதையும் காணலாம். இத்தகைய ஒழுங்கமைவு இறை நம்பிக்கையுடன் இணைந்த தற்காப்பு மற்றும் தற்சார்பு நம்பிக்கையையும் பெருக்குவதாக அமைகிறது.


இஸ்லாமியருக்கான பண்பாட்டுத் தளத்தில் இரமலான் பண்டிகை என்பது தனிநபர் அளவிலும் சமூக அளவிலும் நல்விளைவுகளை உருவாக்கும் ஒரு மகத்தான திருவிழாவாக விளங்குகிறது. அத்துடன், இரமலான் நோன்பு காலத்தில் இந்து உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தவர்களுடன் இஸ்லாமியர்கள் இணக்கமாக இருந்து சகோதரத்துவத்தைப் பேணுவதைத் தங்களின் கடமையாகக் கொண்டுள்ளனர். முப்பது நாட்களிலும் இஃப்தார் நிகழ்வுகளில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவரை இணைத்துக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது போற்றுதலுக்குரியது.


சகோதரத்துவத்தைப் பேணும் இத்தகைய உயரிய பண்பாடுதான் சமத்துவத்திற்கான இலக்கை நோக்கி பயணிப்பதற்கு அடித்தளமாக உள்ளது. இதன்மூலம் இஸ்லாம் என்பது சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்குமான ஒரு பண்பாட்டு நெறியாக - வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதைக் காணமுடிகிறது.


இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில் இரமலான் நோன்பைக் கடைபிடிக்கும் இஸ்லாமியர் யாவருக்கும் விசிக சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.