Skip to main content

50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தி வி.சி.க ஆர்ப்பாட்டம்... 

Published on 27/10/2020 | Edited on 28/10/2020

 

The VCK has demanded 50% reservation this year itself

 

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சிதம்பரத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதில் தொல். திருமாவளவன் எம்.பி பங்கேற்கிறார் என்றும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வம் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமாவளவன் மீது தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தும் பாரதிய ஜனதா கட்சியினரைக் கண்டித்து சிதம்பரம் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அதே நாளில் அறிவித்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
 

பின்னர் போராட்டத்தில் ஈடுபடவந்த, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வம்  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழக அரசியல் களத்தில் கருத்தியலைக் கருத்தியலாக எதிர்கொள்ளாமல் கொலை மிரட்டலாகவும், வன்முறையாகவும் எதிர்கொள்ளும் அநாகரிகமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. 

 

சமத்துவப் பெரியார் கலைஞரின் ராமர்பாலம் குறித்த கருத்திற்கு அவரது நாக்கை வெட்டுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்ததிலிருந்து நடிகை ஜோதிகா, வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அவரது இயல்பான கருத்துகளைக் கூறியபோது மிகவும் கீழ்த்தரமாக பா.ஜ.க.வினர் விமர்சித்தனர். 

 

தமிழக அரசியல் களத்தை பா.ஜ.க.வினர் வன்முறை களமாக மாற்றி வருகின்றனர். திருமாவளவன் மனுநூலில் பெண்கள் குறித்து எவ்வாறு இழிவாகக் கூறப்பட்டுள்ளது என்பதைப் பேசினார். இதனைக் கீழ்த்தரமாகச் சித்தரித்து தமிழக அரசியல் களத்தை, பா.ஜ.க ஒரு வன்முறைக் களமாக மாற்றியுள்ளது. இந்தத் திசைதிருப்பும் அரசியலுக்கு அடிபணியாமல் கட்டுக்கோப்பாக அமைதியாக இருக்க வேண்டும் எனத் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி நாங்கள் செயல்படுவோம்.


மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும். உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை, 21 நாளில் சட்டமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு, இதில் எதிர்நிலை எடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

 

cnc

 

இதனைக் கண்டித்து ஜனநாயக சக்திகளும், சமூகநீதியை ஏற்றுக்கொள்ளும் அமைப்புகளும் இணைந்து, சிதம்பரத்தில் 28 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார். 

 

பாரதிய ஜனதா கட்சி குஷ்புக்கு எதிரான நெருக்கடியை உண்டாக்கிறது. எனவே அவர் விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார். மனுஸ்மிருதி நூல் குறித்து திருமாவளவன் பெரியார் சொன்ன கருத்தைத் தான் கூறியுள்ளார். இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதனால் தி.மு.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த உறசலும் இல்லை எனக் கூறினார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.