மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், சிதம்பரத்தில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அதில் தொல். திருமாவளவன் எம்.பி பங்கேற்கிறார் என்றும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், திருமாவளவன் மீது தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தும் பாரதிய ஜனதா கட்சியினரைக் கண்டித்து சிதம்பரம் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அதே நாளில் அறிவித்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபடவந்த, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழக அரசியல் களத்தில் கருத்தியலைக் கருத்தியலாக எதிர்கொள்ளாமல் கொலை மிரட்டலாகவும், வன்முறையாகவும் எதிர்கொள்ளும் அநாகரிகமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது.
சமத்துவப் பெரியார் கலைஞரின் ராமர்பாலம் குறித்த கருத்திற்கு அவரது நாக்கை வெட்டுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்ததிலிருந்து நடிகை ஜோதிகா, வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகள் அவரது இயல்பான கருத்துகளைக் கூறியபோது மிகவும் கீழ்த்தரமாக பா.ஜ.க.வினர் விமர்சித்தனர்.
தமிழக அரசியல் களத்தை பா.ஜ.க.வினர் வன்முறை களமாக மாற்றி வருகின்றனர். திருமாவளவன் மனுநூலில் பெண்கள் குறித்து எவ்வாறு இழிவாகக் கூறப்பட்டுள்ளது என்பதைப் பேசினார். இதனைக் கீழ்த்தரமாகச் சித்தரித்து தமிழக அரசியல் களத்தை, பா.ஜ.க ஒரு வன்முறைக் களமாக மாற்றியுள்ளது. இந்தத் திசைதிருப்பும் அரசியலுக்கு அடிபணியாமல் கட்டுக்கோப்பாக அமைதியாக இருக்க வேண்டும் எனத் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி நாங்கள் செயல்படுவோம்.
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க வேண்டும். உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை, 21 நாளில் சட்டமாக நிறைவேற்றிய பா.ஜ.க. அரசு, இதில் எதிர்நிலை எடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதனைக் கண்டித்து ஜனநாயக சக்திகளும், சமூகநீதியை ஏற்றுக்கொள்ளும் அமைப்புகளும் இணைந்து, சிதம்பரத்தில் 28 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இதில் சிதம்பரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி குஷ்புக்கு எதிரான நெருக்கடியை உண்டாக்கிறது. எனவே அவர் விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார். மனுஸ்மிருதி நூல் குறித்து திருமாவளவன் பெரியார் சொன்ன கருத்தைத் தான் கூறியுள்ளார். இதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதனால் தி.மு.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எந்த உறசலும் இல்லை எனக் கூறினார்.