Skip to main content

”தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” - வானதி சீனிவாசன்

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

 Vanathi Srinivasan says Tamilnadu government cannot cancel NEET

 

நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

 

காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் விதமாக பா.ஜ.க நெசவாளர் அணி சார்பில் நேற்று (18-08-23)  ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே  நடந்த இந்த ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் தொடங்கி வைத்து பங்கேற்றார். அதன் பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

 

இந்த விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், “ நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. இன்றைக்கு இருக்கக்கூடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தொடர்பாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல், நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் தெரியும் என்று கூறுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதியை அளித்தார்கள். 

 

ஆனால், இன்றுவரை அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. பள்ளிகளில் நீட் தேர்வுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவில்லை. ஒரு மாநில அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது திமுகவுக்கு நன்றாக தெரியும். இன்று உயிரிழந்திருக்கக்கூடிய ஒவ்வொரு மாணவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியது திமுகவின் கடமை. உயிரிழந்த சடலத்தின் மீது அரசியல் நடத்துவது திமுகவின் பழக்கம். அந்த வகையில் இங்கு இருக்கக்கூடிய மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்காக நீட் தற்கொலையை அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள்.

 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.   கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மீனவர்கள் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால், தற்போதைய மோடி ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மீனவ மக்களுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் ஏராளமானவை உள்ளன. ஆனால், மோடி அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை ஏற்கவே முடியாது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
cm stalin announced that relief of Rs.6 thousand will be given to the affected people

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்; நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

Next Story

“புயல் எச்சரிக்கை கொடுத்தும் அரசு மெத்தனமாக இருந்திருக்கிறது” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
edappadi Palaniswami accused Tamil Nadu government of flooding in Chennai

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருவெற்றியூரில் வெள்ள நிவாரண பணிகளை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்தியாவிற்கே வழிகாட்டி மாநிலம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஊழலில்தான் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக விளங்குகிறது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றில்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலம். திமுக அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் கோடி திட்டங்களில் பெரும் ஊழல் நடந்திருப்பது. 

2015 ஆம் ஆண்டு கன மழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை. இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சாரம் உயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை வரும்போது சென்னை மாநகர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது என்று எல்லாருக்கும் தெரியும்; அதனால் பால் தட்டுப்பாடு வரும் என்று அரசுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மழைக்கு முன்பே நியாய விலை கடைகளின் மூலம் பால் பவுடரை மக்களுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?  புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை” என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.