Skip to main content

முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா ரத்து!!! சிறப்பு அபிஷேகத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு...

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
Thiruchendur


இன்று கடவுள் முருகன் பாலகனாகப் பிறந்தநாள். இந்தநாள் வைகாசி விசாகத் திருவிழாவாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகனை வழிபட்ட பலன், இன்றைய வைகாசி விசாகம் நாளன்று வழிபட்டால் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் முருகன் அவதாரம் செய்த விசாகத் திருநாளன்று திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், கழுகுமலை உள்ளிட்ட முக்கியமான பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரளுவர். முருகப் பெருமானை தரிசிப்பார்கள். அன்றைய தினம் முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் அன்னதானங்கள் நடக்கும்.


ஆனால் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24 முதல் 72 நாட்களாக பொது முடக்கம் தொடருவதால் ஆலயங்கள் பூட்டப்பட்டுவிட்டன. பக்தர்கள் குறைகளை சொல்லி முறையிட்டு ஆண்டவனை கூட வழிபட முடியவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாலயே வைகாசி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆகம விதிகளை பின்பற்றும் பொருட்டு, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் ஆலயங்களில் பட்டர்கள் அறநிலையத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று வைகாசி விசாகமான இன்று முருகப் பெருமானுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்துள்ளனர். ஆனால் தடை காரணமாக பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அபிஷேகம் முடிந்தவுடன் ஆலயங்கள் பூட்டப்பட்டன. 

 

 


இதே போன்ற நடைமுறைதான் தூத்துக்குடி மாவட்டத்தின் அடுத்த பிரசித்தி பெற்ற கழுகுமலை குமரன் ஆலயத்திலும் பின்பற்றப்பட்டு ஆலய நடை சாத்தப்பட்டது. அங்கு விசாகமன்று முருக தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த பாலை ஆலயத்தின் வெளியே உள்ள பாத்திரத்தில் முருகன் அபிஷேகத்திற்காக ஊற்றிவிட்டு, பூட்டிய ஆலயத்தை வழிபட்டுவிட்டு கிரிவலமாக கழுகுமலை, மலை நகரை சுற்றி வலம்வந்து வணங்கி சென்றனர். பக்தர்கள் ஊற்றிய பாலை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

கொடூர கரோனாவின் ஆக்டோபஸ் கரங்கள், பக்தர்களின் ஆலய தரிசனத்தையும் தடை செய்து நீங்காத பாவத்தைக் கொட்டிக் கொண்டது என்று புலம்புகின்றனர் தீவிர பக்தர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.