Skip to main content

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை 

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Union Minister Amit Shah will visit Tamil Nadu today

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு  9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசும், பாஜகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த மே  மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகள் பற்றி மக்களிடம் விளக்க பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதையடுத்து பல்வேறு ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாளை நடக்க உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று இரவு சென்னை வரும் அமித்ஷா, கிண்டியில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்குகிறார். பின்னர் நாளை காலை 9 மணிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரையும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இதனையடுத்து, நாளை மதியம் சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வேலூர் செல்கிறார். பிற்பகல் 2.30 மணிக்கு வேலூர் விமான நிலையம் சென்றடையும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பள்ளிகொண்டாவில் உள்ள காந்தனேரிக்கு வருகிறார். அங்கு நடக்கும் பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.