Skip to main content

அடிக்கடி வந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள்... காவல்துறையிடம் புகாரளித்த அக்கம் பக்கத்தினர்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Unidentified persons who came frequently ... Neighbors who reported to the police

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வடவீக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்(34) - மீனா(30) தம்பதி. இவர்களுக்கு 9 வயதிலும், ஆறு வயதிலும், நான்கு வயதிலும் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த மீனா கடந்த 2 மாதத்திற்கு முன்பு  நான்காவதாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் தற்போது நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது அதே போல் நாமும் வறுமையின் பிடியில் தள்ளாடுகிறோம் எனப் புலம்பியுள்ளனர். மேலும் இந்த நான்கு பெண் பிள்ளைகளையும் வளர்த்துப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இயலாத காரியம் என்று கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசி கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த  நான்காவதாகப் பிறந்த  பெண் குழந்தையைக் காணவில்லை எங்கே குழந்தை என அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அப்போது குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாகக் கணவன் மனைவி இருவரும் கூறியுள்ளனர். இந்த நிலையில் சமீப நாட்களில் அவர்கள் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்கள் யார் என்று அக்கம் பக்கத்தினர் சரவணனிடம் கேட்டபோது, ‘எங்கள் தூரத்து உறவினர்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இந்த நிலையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை வீட்டில் இல்லை எங்கே குழந்தை எனக் கேட்டால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறார்கள் சம்பந்தம் இல்லாத ஆட்கள் வந்து போகிறார் ஏதோ மர்மமாக நடக்கிறது என்று ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கதிரவனுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கும், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் தகவல் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து வடவீக்கம் சென்று விசாரணை நடத்திய போது அந்தப் பெண் குழந்தையை தங்களால் வளர்த்து ஆளாக்க முடியாது என்ற காரணத்தினால் குழந்தையை எங்கோ கொண்டு சென்று விற்று விட்டதாகவும் தற்போது சரவணன் மீனா தம்பதிகளின் வீடு பூட்டி இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மீனா தம்பதிகளைத் தனிப்படை அமைத்துத் தேடினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் முத்தையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்கள் மூலம் சரவணன் மீனா தம்பதிகள் கோவைக்குக் குழந்தையை எடுத்துச் சென்று அங்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு அந்த குழந்தையை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அதோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ததோடு குழந்தையையும் மீட்டுள்ளனர். வறுமையின் கொடுமையால் தங்கள் பெற்ற இரண்டு மாத பெண் குழந்தையைப் பெற்றோர்களே விற்பனை செய்த நிலையைக் கண்டு அரியலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.