விருதுநகரைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண், ஆபாச வீடியோ மிரட்டலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில், ஹரிஹரன், ஜுனத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும், பள்ளி மாணவர்களான சிறுவர்கள் நால்வரும் கைதானார்கள்.
கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் நால்வரையும் சிபிசிஐடி போலீசார் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அம்மாணவர்களிடம் 4 மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் கோரி அந்த 4 சிறுவர்களும், மதுரையிலுள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி மருதுபாண்டியன், நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 4 மாணவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்.