சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஏர் லங்கா விமானம் 70 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் பிரதீபா என்ற பெண்ணுக்கும் அவரது 6 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
பிரதீபா தனது கணவர் மற்றும் மகளுடன் சீனாவில் இருந்துள்ளார். அவரது கணவர் வேலைநிமித்தமாக வேறொரு நாட்டிற்குச் சென்றதால், தனது மகளுடன் சீனாவில் இருந்து ஸ்ரீலங்கா வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது அவருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளத்தில் உள்ள அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.