Skip to main content

மூதாட்டியை கடத்தி கொன்ற இருவர் கைது! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Two arrested in old lady passed away case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகிலுள்ள பாக்கம் புதூர் கிராம சுடுகாட்டில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் மர்மமாக புதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். 


இந்நிலையில், புதைக்கப்பட்ட பெண்ணுடல் அதே பகுதியில் உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ஆண்டாள்(60) என்பதும், இவரது கணவர் இறந்துவிட்டதால் தனது மகள் தனலட்சுமியுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. கொலை செய்து சுடுகாட்டு பகுதியில் புதைத்த சம்பவத்தன்று அப்பகுதியில் செயல்பட்ட மொபைல் போனில் பேசியவர்களின் சிக்னலை வைத்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். 


அதில் விரியூரைச் சேர்ந்த வீராசாமி(55) மற்றும் அவரின் மகன் விக்னேஷ்(25). ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். அதில் ஆண்டாள் மகள் தனலட்சுமி  அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். வீராசாமி புதிதாக அரிசி கடை தொடங்க முடிவு செய்து, அதற்காக தனலட்சுமியிடம் ரூ.15 லட்சம் பணம் கொடுத்து அரிசி வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அந்தப் பணத்தை வாங்கிய தனலட்சுமி, அரிசி வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீராசாமி அரிசி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், பணத்தையும் திருப்பித் தராமல் தனலட்சுமி காலம் தாழ்த்தி வந்துள்ளார். 


கடந்த 7ஆம் தேதி வீராசாமியும், விக்னேஷும் பணம் கேட்பதற்காக தனலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனலட்சுமி வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமியின் தாய் ஆண்டாளை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்று கடந்த 18ஆம் தேதி வரை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும், தனலட்சுமி தன் தாயைத் தேடி வரவில்லை. அடைத்து வைத்திருந்த ஆண்டாளை வெளியே விட்டால் அவர் போலீஸிடம் தெரிவித்துவிடுவார் என அஞ்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 

 

அதன்படி 18-ஆம் தேதி மதியம் ஆண்டாளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவர்களது நண்பர் திருவண்ணாமலை மாவட்டம், அல்லப்பனூரைச் சேர்ந்தவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவரது ஆலோசனையின்படி ஆண்டாளின் முகத்தை அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, பாக்கம் புதூர் சுடுகாட்டில் கொண்டு வந்து சம்பவத்தன்று இரவோடு இரவாக புதைத்துவிட்டு சென்றுள்ளனர். இதை போலீசாரிடம் தந்தை-மகன் இருவரும் வாக்குமூலமாக அளித்துள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வீராசாமியையும் அவரது மகன் விக்னேஷையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.