Skip to main content

சீன் போட்ட சின்னப்பன்... கெத்து காட்டிய மார்க்கண்டேயன்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue

 

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட விளாத்திகுளம் மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தி.மு.க.வில் சேர்ந்தபிறகு சொந்த தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மார்க்கண்டேயன் விளாத்திகுளம் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புகள் அதிகம் என அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

 

இந்த சூழ்நிலையில் எதிரணியில் அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ சின்னப்பன் மீண்டும் சீட்டுக்காக காய்நகர்த்தி வருகிறார். இதற்காக அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்றாலும், அமைச்சர், முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ மகன் ஒருவருக்கு சீட் தருவதற்கு கட்சித் தலைமையிடம் சிபாரிசு செய்திருக்கிறார் எனத் தெரிகிறது. தி.மு.க.வில் கிட்டத்தட்ட மார்க்கண்டேயனுக்குத்தான் சீட் என்பது உறுதியாகி விட்டது. அமைச்சரோ வேறு ஒருவருக்கு சிபாரிசு செய்கிறார். இதனால் கட்சித்தலைமையின் கவனத்தை ஈர்க்க திட்டம் தீட்டினார் சின்னப்பன். இதற்காக அ.தி.மு.க 49-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'மார்க்கண்டேயன் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு இப்போது எதிரணியில் இணைந்திருப்பதாக' சரமாரியாகத் திட்டித்தீர்த்தார்.

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue

 

இந்நிலையில்  விளாத்திகுளத்தில் 22ஆம் தேதி தி.மு.க கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த காவல்துறையிடம் 3 நாட்களுக்கு முன்னரே அனுமதி வாங்கிவிட்டார் மார்க்கண்டேயன். அன்றைய தினமும் மார்க்கண்டேயன் மக்களை திரட்டி 'மாஸ்' காட்டிடுவார் என்பதை அறிந்த சின்னப்பன், நாங்களும் அதே நாளில் கொடியேற்றப்போகிறோம், அனுமதி தாருங்கள் என காவல்துறையிடம் மனு கொடுத்தார். நீங்கள் 'முதல்நாள் கொடியேற்றுங்கள் அல்லது அவர்கள் கொடியேற்றிய மறுநாள் ஏற்றிக்கொள்ளுங்கள்' எனக் கூறி, காவல்துறை அ.தி.மு.க சின்னப்பனுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

 

இதனால் பிரச்சனையைக் கிளப்பும் முடிவில் கட்சி நிர்வாகிகளை திரட்டிய சின்னப்பன் தலைமையிலான அ.தி.மு.கவினர், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளையும் மீறி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது தடுக்க முயன்ற டி.எஸ்.பி கலைக்கதிரவனை கீழே தள்ளிவிட்டனர். இதில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் சின்னப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினபு பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தார்.

 

Tuticorin Vilathikulam DMK ADMK issue


மார்க்கண்டேயனை எதிர்க்க சின்னப்பன் தான் சரியான ஆள் எனக் கட்சித் தலைமை நினைக்க வேண்டும் என முடிவு செய்து சின்னப்பன் செய்த செயல், அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. எம்.எல்.ஏ சின்னப்பன் தேவையில்லாமல் சின்னப்பிள்ளைத் தனமான வேலைசெய்து மார்க்கண்டேயனின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டுள்ளதாக புலம்புகின்றனர் ர.ரக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.